புதுடெல்லியில் டிச.24-ம் தேதி நடைபெறும் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் மக்கள் நீதி மய்ய கட்சித்தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார்.
பாஜக அரசின் வகுப்புவாத அரசியலை எதிர்த்து மக்கள் ஒற்றுமை யாத்திரையை செப்.7-ம் தேதி கன்னியாகுமரியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தொடங்கினார். காஷ்மீர் வரை நடைபெறும் இந்த யாத்திரையில் 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரத்தை ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணம், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரம், தெலங்கானா மகாராஷ்டிரா வழியாக தற்போது ராஜஸ்தானில் பயணித்துக் கொண்டிருக்கிறது.அவருக்குப் பல்வேறு கட்சித்தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், புதுடெல்லியில் டிச.24-ம் தேதி நடைபெறும் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் மக்கள் நீதி மய்ய கட்சித்தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார். ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று இந்த நடைபயணத்தில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவுள்ளதாகவும், ஜனநாயகத்தைக் காக்க ராகுலின் நடைபயணத்தில் கமல் கலந்து கொள்ளவுள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மவுரியா தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி சேருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.