சத்ரபதி சிவாஜி குறித்து பேசிய மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கடுமையாக விமர்சித்துள்ளார்
சத்ரபதி சிவாஜி "பழைய நாட்களின் சின்னம்” என்று கடந்த வாரம் அவுரங்காபாத்தில் நடந்த ஒரு நிகழ்வின்போது மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி கூறியிருந்தார். அவரது இந்த கருத்து என்சிபி மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார், “சத்ரபதி சிவாஜி பற்றி ஆளுநர் கூறிய கருத்துக்களை கேட்டபோது, இப்போது அவர் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டார் என தெரிகிறது. ஜனாதிபதியும் பிரதமரும் ஆளுநர் கோஷ்யாரி பற்றி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இத்தகையவர்களுக்கு முக்கியமான பதவிகள் வழங்கப்படக் கூடாது” என்றார்.
ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி வியாழக்கிழமை தொடங்கி இரண்டு நாள் டெல்லி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.