
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே துறை அதிகாரி ஒருவருக்காக ஆயிரக்கணக்கான பயணிகள், வயதானவர்கள், கைக்குழந்தையோடு பெண்கள் பரிதவிப்போடு அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில், சென்னையிலிருந்து மதுரை செல்ல நேற்று (நவ.16) இரவு எழும்பூர் ரயில் நிலையம் வந்தேன். வழக்கமாக பாண்டியன் விரைவு ரயில், பயணிகள் வந்து ஏறுவதற்கு வசதியாக உள்ளே நுழைந்ததும் எதிர்படும் 4வது நடைமேடையில் தான் நிறுத்தப்படும்.
எழும்பூர் ரயில் நிலையத்தை பொறுத்தவரை அதுதான் முதல் நடைமேடை. நேற்று வழக்கத்துக்கு மாறாக பாண்டியன் விரைவு ரயில் 5வது நடைமேடைக்கு மாற்றப்பட்டிருந்தது. சுமார் ஆயிரம் பயணிகள் இங்கும் அங்குமாக அலைக்கழிந்து படிக்கட்டில் ஏறி அடுத்த நடைமேடைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆனால் 4வது நடைமேடையில் ஒரு ரயில் நிறுத்தப்பட்டிருந்தது.
அந்த ரயில், பயணிகள் யாருமே ஏறாத நிலையில் இருந்தது. இந்த ரயில் எங்கே செல்கிறது, இதை ஏன் 4வது நடைமேடையில் நிறுத்தியுள்ளீர்கள் என ரயில்வே அதிகாரியிடம் கேட்டேன். அதற்கு அவர், ரயில்வே போர்டு உறுப்பினர் ரூப் நாராயண் சங்கர் வந்துள்ளார். நாளை ராமேஸ்வரத்துக்கு ஆய்வுக்கு செல்கிறார். அவருக்காக இந்த வண்டி நிற்கிறது என்றார்.
ரயில் நிலைய கட்டுமானப் பணி, தண்டவாள பழுதுநீக்க பணி நடைபெறுகிறது என்றால் வேறு நடைமேடைக்கு ரயில்கள் மாற்றப்படுவதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரு நபர் படிக்கட்டுகளில் மேல் ஏறி இறங்கி அடுத்த நடைமேடைக்கு செல்லும் சிரமத்தைத் தவிர்க்க ஆயிரம் பயணிகள் பயணிக்கும் பாண்டியன் விரைவு ரயில் வண்டியை அடுத்த நடைமேடைக்கு மாற்றி, மக்களை அலைக்கழித்த கொடுமை நிகழ்ந்துள்ளது.
பிரிட்டிஷ் காலத்தில் இருந்த நிர்வாக அடிமைத்தன பழக்கம் நடைமுறையில் இருக்கும் துறையாக ரயில்வே துறை உள்ளது. காலனிய ஆட்சியில் உருவாக்கப்பட்ட நடைமுறைகளைத் தங்களின் வசதிக்காக இன்றளவும் கடைப்பிடிக்கிற அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஒரு அதிகாரியின் நலன் கருதி ஆயிரம் பயணிகளை அலைக்கழித்ததற்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பொறுப்பேற்று விளக்கம் அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்திலும் அவர் வெளியிட்டுள்ளார்.