சீரடி ரயிலை இயக்குவது அரசாங்கம்… கட்டணத்தை வசூலிப்பது மட்டும் தனியாரா?: கொந்தளிக்கும் மதுரை எம்.பி!


சீரடி ரயிலை இயக்குவது அரசாங்கம்… கட்டணத்தை வசூலிப்பது மட்டும் தனியாரா?: கொந்தளிக்கும் மதுரை எம்.பி!

தெற்கு ரயில்வேயில் கோவை முதல் சீரடி வரை இயக்கப்பட உள்ள தனியார் ரயிலை, ரயில்வே நிர்வாகமே எடுத்து நடத்திட வேண்டும் என்று மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "ஜூன் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு வட கோவையில் இருந்து சீரடிக்கு முதல் தனியார் ரயில் இயங்க ரயில்வே அனுமதித்துள்ளது. கோவையைச் சேர்ந்த எம்.என்.சி பிராபர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் இதனை இயக்கவுள்ளது.

ரயில், தண்டவாளம், சிக்னல், நடைமேடை ரயில்வேக்கு சொந்தம், ரயில்வே டிரைவர் வண்டியை இயக்குவார்கள். ஆனால், டிக்கெட் விற்பனை, பயணிகளைப் பரிசோதிப்பது அதாவது, வருமானம் மட்டும் தனியாருக்கு. அத்துடன் கட்டணம் அவர்கள் விருப்பம் போல் வைத்துக்கொள்ள அனுமதி. சீரடிக்குச் செல்ல விரும்பும் பக்தர்களைச் சுரண்டும் நடவடிக்கை இது.

கோவையிலிருந்து சீரடிக்கு செல்ல ஆயிரத்து 458 கிலோமீட்டர் தூரத்துக்கு ஸ்லீப்பர் கட்டணம் ரூ. 1280. ஆனால், அவர்கள் வசூலிப்பது ரூ. 2500 ரூபாய். மூன்றடுக்கு குளிர்சாதனப் படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ. 2360, தனியார் கட்டணம் ரூ. 5000. குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ. 4820. ஆனால், தனியார் கட்டணம் ரூ. 7000. குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ. 8190, தனியார் கட்டணம் ரூ. 10000. அதாவது ஸ்லீப்பர் கட்டணம் இண்டு மடங்கு. குளிர்சாதனப் படுக்கை மூன்றடுக்கு, இரண்டடுக்கு ஆகியவை ஒன்றரை மடங்கு. முதல் வகுப்பு ஒண்ணேகால் மடங்கு கட்டணக் கொள்ளை.

தனியாருக்கு உரிமை கட்டணம் முன்பு ரூ.40 லட்சம் என்று தீர்மானித்து பின்னர், அதிலும் ரூ.11 லட்சம் குறைத்து வசூலிப்பது ரயில்வேயின் வருமானத்தைப் பாதிக்கவில்லையா? நாங்கள் சாதாரண மக்கள் பயன்படுத்தும் ரயில்வேயை தனியாரிடம் விடக்கூடாது என்று வலியுறுத்தி வருகிறோம். ரயில்வே அமைச்சர் அண்மையில் சென்னை வந்தபோது, ரயில்வேயில் தனியார்மயம் கிடையாது என்று அடித்துச் சொன்னார். ஆனால், அதற்கு மாறாக முதல் தனியார் ரயிலை தமிழகத்தில் இருந்து இயக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது. தனியார் ரயில் என்றால் ஒரு கட்டணச் சலுகையும் கிடையாது. ஏன் முதியோர் கட்டண சலுகையும் கிடையாது. அது மட்டுமல்ல ரயில்வேயைப் போல ஒன்றரை மடங்கு முதல் 2 மடங்கு வரை கட்டணம் உயர்வு. இதுதான் தனியார்மயம். இந்த வண்டியில் டிக்கெட் பரிசோதகர்கள், தனியார் பரிசோதகர்கள். தனியார் வண்டியானால் இப்படித்தான் நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இந்த நிலையில் இந்திய ரயில்வே தேசிய ரயில் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து லாபம் வரும் பயணிகள் வண்டிகளும், சரக்கு ரயில்களும் 2031-க்குள் தனியாருக்கு தாரை வார்க்கப்படும். தனியாருக்கு தாரை வார்த்தால் கட்டணங்கள் உயரும், சலுகைகள் பறிபோகும் என்பதன் எடுத்துக்காட்டு தான் சீரடி ரயில்.

இவர்களுக்கு இருப்பது ஆன்மிகத்தின் பக்தியுமல்ல, தேசபக்தியுமல்ல, தனியார் பக்தி மட்டும் தான். எனவே, கோவை- சீரடி ரயிலை ரயில்வே நிர்வாகமே எடுத்து நடத்திட வலியுறுத்துகிறேன். உலகின் முதல் பெரும் பொதுத்துறையான இந்திய ரயில்வேயின் இந்த தனியார்மயமாக்கல் செயல்பாட்டைத் துவக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in