`கழிசடை' என்ற குருமூர்த்தியை கண்டியுங்கள்'- நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் ஆவேச கடிதம்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் துக்ளக் விழாவில் வங்கி ஊழியர்களை "கழிசடை" என்று கூறிய குருமூர்த்தியைக் கண்டிக்கச் சொல்லி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "துக்ளக் விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் பேசிய இதழ் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி வங்கி அதிகாரிகளை, ஊழியர்களை "கழிசடைகள்" என்று வசை மாறி பொழிந்துள்ளார். மிக நாகரிகமாகப் பொருள் கூறினால் "உதிர்ந்த ரோமம்" என்பதே. லட்சக்கணக்கான வங்கி ஊழியர்கள் மிகுந்த மனக் காயத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.

வங்கி அலுவலர்களோடு குருமூர்த்தியின் விமர்சனம் நிற்கவில்லை. சி.வி.சி போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளையும் தர்க்க நியதி இல்லாமல் விமர்சனம் செய்துள்ளார். அதற்குத் தீர்வாக அரசின் பங்குகளை அரசு வங்கிகளில் 51% ல் இருந்து 49% க்கு குறைப்பதே வழி என்றும் கூறியுள்ளார். தனியார் நிதி நிறுவனங்களில் என்ன நடக்கிறது என்பது பற்றி வரும் செய்திகளை மக்களும் அறிவார்கள். அமலாக்கப் பிரிவு ஒரு பிரபல தனியார் வங்கியின் உயர் பொறுப்பிலிருந்தவர்கள் பற்றி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை பல கதைகளை பேசுகிறது.

துக்ளக் குருமூர்த்தி
துக்ளக் குருமூர்த்தி

உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து விட்டு அவர்களின் முன்னிலையிலேயே அநாகரிகமாகப் பேசி இருக்கிறார். மேலும், வங்கி ஊழியர்கள் நிதியமைச்சரின் கீழ் பணியாற்றுபவர்கள். கோவிட் காலத்தில் அளப்பரிய பணியை பல இன்னல்களுக்கு மத்தியில் ஆற்றியுள்ளார்கள். அதை அக்கூட்டத்தின் நிதியமைச்சரின் உரையும் அங்கீகரித்துள்ளது.

நிதியமைச்சர் அவர்களே! குருமூர்த்தியின் அநாகரிகமான வார்த்தைகள் வெளிப்படையாகக் கண்டிக்கப்பட வேண்டும். அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள், குரு மூர்த்தி உட்பட எந்த பகுதி தொழிலாளர்களின் கௌரவத்தையும் பாதிக்கிற வகையிலான பொறுப்பற்ற பேச்சுக்களை பொது நிகழ்ச்சிகளில் பேசக் கூடாது என அறிவுறுத்தப்பட வேண்டும். உடனடியாக அவர் வகிக்கும் உயர் பொறுப்பின் மதிப்பையும் சீர் குலைக்கிற குருமூர்த்தியின் "கழிசடை" கூற்றை நிதி அமைச்சர் கண்டிப்பார் என நம்புகிறேன்" என்று எழுதியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in