`மதுரை திமுகவின் உருவம், பிம்பம் மாற்றப்பட்டிருக்கிறது'

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி
`மதுரை திமுகவின் உருவம், பிம்பம் மாற்றப்பட்டிருக்கிறது'

‘‘மதுரையில் தவறான திசையில் சென்ற திமுகவின் உருவம், பிம்பம் தற்போது திருத்தும் வகையில் புதிய வழியில் செல்லத்தொடங்கியிருக்கிறது’’ என்று நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி புதிய மேயராக இந்திராணி பொன்வசந்த் பொறுப்புபேற்று கொண்டநிலையில் அவர், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், "மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு 6 ஆண்டுகள் தாமதமாக தற்போது தேர்தல் நடந்து, அதில் தேர்வு பெற்றவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின், உள்ளாட்சியிலும் நம்ம ஆட்சி என்ற ஒரு முழக்கத்துடன் தேர்தலை சந்தித்தார். அவலநிலையில் இருந்த தமிழகத்தின் நிதி நிலை, மேலாண்மை, அரசு நிர்வாகம் போன்றவை கடந்த 9 மாதத்தில் சீர்திருத்தம் கொண்டு வந்ததின் அடிப்படையில் மக்கள் முழு நம்பிக்கையுடன் இதுவரை காணாத வெற்றியை இந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுகவுக்கு வழங்கி உள்ளனர்.

அரசியலில் பலர் இருப்பார்கள். பல காரணங்களுக்காக, இலக்குகளுக்காக அரசியலுக்கு வருவார்கள். ஆனால், எங்களை பொறுத்தவரையில் நீதி கட்சி காலத்தில் இருந்து அடிப்படை தத்துவம், கொள்கை, சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி சென்றதால் இந்தியாவிலே முதல் மாநிலமாக தமிழகம் தற்போது உள்ளது. அதனாலே முதலமைச்சர் ஸ்டாலின், இந்த ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்கிறார். திராவிட மாடல் ஆரம்பமாகிவிட்டது. சுய மரியாதை எந்த மனிதர்களுக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களுக்கு சுய சிந்தனை இருக்க வேண்டும்.

சுய சிந்தனை இருக்கிறவர்களுக்கு சுய நிர்ணயம் ஒரு உரிமை. சுய நிர்ணயத்தை உருவாக்குவது சுயாட்சி. சுயாட்சி என்பது ஒரு மாநிலத்தின் உரிமை மட்டுமில்லை. மாமன்றங்கள், மாவட்டங்கள், ஒன்றியங்கள், பஞ்சாயத்துகள் எல்லாவற்றிலும் மக்களே அவர்களை மேலாண்மை செய்து கொள்ள வேண்டும். இது சுயமரியாதையின் நீட்சி. அந்த அடிப்படையிலே மக்களுக்கான ஆட்சி நாட்டளவில், மாநில அளவில் இருப்பதைவிட உள்ளாட்சியில் இருப்பது சிறந்தது.

மக்களுடைய அடிப்படை தேவைகள் குடிநீர், குப்பை அகற்றுவதல், சாலைகள் பராமரிப்பு, தெருவிளக்குகள், பாதாள சாக்கடைகள் போன்றவை. இவை உள்ளாட்சியின் உரிமை, கடமை. இவைகள் இன்னும் நம் நாட்டில் சிறந்த அளவிற்கு வரவில்லை. இந்த விஷயத்தில் இந்தியாவின் சராசரியைவிட தமிழகம் உயர்ந்து இருக்கிறது தவிர, நமது விருப்ப அளவிற்கு மக்களின் வாழ்க்கை முறை சிறப்பிக்கவில்லை. இதை திருத்துவது முதல் இலக்கு. அந்த இலக்கிற்கு முக்கிய அடிப்படை உள்ளாட்சி. இதனால்தான் கடந்த 6 ஆண்டாக உள்ளாட்சித்தேர்தல் நடத்தாமல் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது என்று நாங்கள் சொன்னோம்.

மதுரை மாநகர வரலாற்றில் இன்றைக்கு புது ஆரம்பம். இதுவரை இல்லாத அளவிற்கு மாமன்ற உறுப்பினர்கள், பெரும்பான்மையுடன் சிறந்த மேயரை தேர்வு செய்து இருக்கிறார்கள். புதிய மேயர் இந்திராணி இரண்டு பட்டங்கள் பெற்றவர். சமுதாயத்தில் நல்லமுறையில் இணைந்து செயல்படக்கூடியவர். எந்த ஒரு கரையும் அவரது கரங்களில் இல்லை. நல்ல வரலாற்றில் இருந்து வந்தவர். திராவிட கொள்கைகளுக்கு என்றும் விசுவாசமாக இருக்கக்கூடியவர். அதனால், அவர் மீது தெளிவாக நம்பிக்கை இருக்கிறது. இதுவரை அடையாத வளர்ச்சியும் முன்னேற்றமும் மதுரை மாநகராட்சியில் இனி நடக்கும். இறுதியாக நான் சொல்கிறேன்.

கடந்த காலங்களில் மதுரையில் திமுகவின் உருவம், பிம்பம் சில வகையில் தவறான ஒரு திசையில் போய் கொண்டு இருந்தது. இதையெல்லாம் திருத்தம் செய்யும் வகையில் கடந்த 2 சட்டமன்ற தேர்தல், ஒரு மக்களவைத்தேர்தல், உள்ளாட்சித்தேர்தல் எந்த கலங்கமும், பிரச்சினையும் இல்லாமல் முறைகளுக்கு உட்பட்டு தெளிவான சுத்தமாக யாரும் தவறும் சொல்லாத அளவிற்கு வெற்றிகரமாக நடந்து இருக்கிறது. இது மதுரையின் புது வழி. இது திமுகவின் இன்றைக்கு இருக்கிற தெளிவான பிம்பம், உருவம் என்று அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in