மாற்றத்தை உருவாக்குமா அதிமுகவின் மதுரை மாநாடு... ஈபிஎஸ்சின் திட்டம் ஈடேறுமா? - விழா பந்தலின் சிறப்பு புகைப்படங்கள்!

மதுரை அதிமுக மாநாட்டிற்கு தயாராகும் விழா பந்தல்
மதுரை அதிமுக மாநாட்டிற்கு தயாராகும் விழா பந்தல் நா. தங்கரத்தினம்

மக்களவைத் தேர்தலுக்கு முன் மக்கள் மத்தியில் தனக்கான செல்வாக்கை நிரூபிக்க பிரமாண்ட கூட்டத்தை காட்ட திட்டமிட்டு முதற்கட்டமாக பரிசோதனை முயற்சியாக மதுரையில் மாநில மாநாட்டை நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல அணிகளாக பிளவுப்பட்டநிலையில் எடப்பாடி பழனிசாமி, கட்சியையும், அதன் சின்னத்தையும் கைப்பற்றினார். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு, அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் போன்றோர், அதை ஏற்றுக் கொள்ள மறுத்து, அதிமுகவை பழனிசாமியிடம் இருந்து மீட்காமல் விடமாட்டோம் என அவருக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறார்கள். அதிமுகவின் 90 சதவீதம் நிர்வாகிகள், பெரும்பான்மை தொண்டர்கள் ஈபிஎஸ் பக்கம் இருந்தாலும், கட்சியை தாண்டி தமிழக அரசியலில் தனது செல்வாக்கை நிரூபிக்கவும், அடுத்த ஆண்டு வரக்கூடிய மக்களவைத் தேர்தலுக்கு அதிமுகவை தயார்ப்படுத்தக்கூடிய இக்கட்டானநிலையிலும் அவர் உள்ளார்.

மதுரை அதிமுக மாநாட்டிற்கு தயாராகும் விழா பந்தல்
மதுரை அதிமுக மாநாட்டிற்கு தயாராகும் விழா பந்தல் நா. தங்கரத்தினம்

அதனால், பொதுச்செயலாளராக பொறுப்பேற்றபோது மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி கட்சியின் மாநில மாநாடு நடத்தப்படுவதாக அறிவித்தார். அவர் அறிவித்தபடி மாநாடு ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா ஆகிய மும்மூர்த்திகள் முன்னின்று செய்து வருகிறார்கள். மாநாடு

நடக்க இன்னும் ஒரிரு நாட்களே மிதமுள்ள நிலையில் மதுரை வலையங்குளத்தில் மாநாட்டு பந்தல், வாகனங்கள் நிறுத்தும் இடம், உணவு தயாரிக்கும் கூடங்கள் அமைக்கும் பணிகள் தடபுடலாக நடக்கின்றன. 5 லட்சம் சதுர அடியில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி நேற்றுடன் நிறைவு பெற்றது. மாநாட்டு மேடை மட்டுமே 20 அடி நீளம், 100 அடி அகலத்தில் டிஜிட்டல் மேடையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேடையில் தலைவர்கள் பேசும்போது, அவர்கள் பேசும் காட்சி நேரலையில் மேடையின் பின்புறம் உள்ள டிஜிட்டல் திரையில் மேடை முன் அமர்ந்திருக்கும் தொண்டர்களுக்கு தெரியும் வகையில் மாநாட்டு மேடையும், பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை அதிமுக மாநாட்டிற்கு தயாராகும் விழா பந்தல்
மதுரை அதிமுக மாநாட்டிற்கு தயாராகும் விழா பந்தல் நா. தங்கரத்தினம்

மாநாட்டு நுழைவு வாயிலில் எம்ஜிஆர், ஜெயலலிதாவும் அவர்களுக்கு கீழே இருவருக்கும் நடுவில் கே.பழனிசாமி இருக்கும் வகையில் அரண்மனை போன்ற தோற்றத்துடன் பின்னணியில் மலை குன்றுகள் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைவர்கள் பேச்சை தொண்டர்கள், பொதுமக்கள் கேட்கும் வகையில் மேடையில் இருந்து கிட்டத்தட்ட 2 கி.மீ தூரத்துக்கு ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு உணவு தயாரிப்பதற்காகவே மாநாட்டு பந்தல் அருகே 35 ஏக்கரில் தனித்தனியாக உணவு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புளிசாதம், ஊறுகாய் போன்ற முன்கூட்டியே தயாரிக்கக்கூடிய உணவுகள் நேற்று முதல் தயாரிக்கும் பணி தொடங்கியது. 10 லட்சம் தொண்டர்களுக்கு உணவு தயார் செய்யப்படுகிறது. இப்பணியில் 5 ஆயிரம் சமையல் கலைஞர்கள் ஈடுபட்டனர். 90 ஆயிரம் கிலோ அரிசி, 30 ஆயிரம் கிலோ பருப்பு மற்றும் காய்கறிகள், பலசரக்கு பொருட்கள் தேவையான அளவிற்கு நேற்று முதல் வந்து இறக்கப்பட்டன. பெரிய பாக்கு மட்டை தட்டுகளில் தொண்டர்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படுகிறது. புளிசாதம், பருப்பு சாதம், ஒரு பொறியல், துவையல் போன்றவை வழங்கப்படுகிறது. இதில், புளிசாதம் எந்நேரமும் கிடைக்கும் வகையில் பார்சல் செய்து தொண்டர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

மதுரை அதிமுக மாநாட்டிற்கு தயாராகும் விழா பந்தல்
மதுரை அதிமுக மாநாட்டிற்கு தயாராகும் விழா பந்தல் நா. தங்கரத்தினம்

தமிழகம் முழுவதும் இருந்து வரும் நிர்வாகிகள், தொண்டர்கள் விரகனூர் சந்திப்பு, மண்டேலா நகர் வழியாகவும், கப்பலூர் டோல்கேட் மற்றும் தோப்பூர் வழியாக விமானநிலையம் செல்லும் சாலை மற்றும் காரியாப்பட்டி மார்க்கமாக வலையங்குளம் வழியாகவும் மாநாடு நடக்கும் வலையங்குளத்திற்கு எளிதாக வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வருகிறவர்களுடைய வாகனங்களை நிறுத்துவதற்கு 350 ஏக்கரில் வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளன. கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் தேவையான அளவு அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்களில் வருவோர் முந்தைய நாள் இரவு மாநாடு நடக்கும் இடத்திற்கு வருவதற்கு 10 கி.மீ., சுற்றளவில் இரவை பகலாக்கும் மின்விளக்குள் அமைக்கப்பட்டுள்ளன.

தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்டநிர்வாகிகள், எம்எல்ஏ-க்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள் போன்றோர் தங்குவதற்கு மதுரையில் உள்ள ஹோட்டல்கள், சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்கள், வீடுகளை பிடித்து முன்பதிவு செய்து முடித்துவிட்டனர். அதுபோல், மாநாடு நடக்கும் இடத்துக்கு அருகிலே முக்கிய தலைவர்கள் தங்குவதற்கு சகல வசதிகள் கொண்டு தற்காலிக வீடுகள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

மதுரை அதிமுக மாநாட்டிற்கு தயாராகும் விழா பந்தல்
மதுரை அதிமுக மாநாட்டிற்கு தயாராகும் விழா பந்தல் நா. தங்கரத்தினம்

மாநாடு அன்று 20ம் தேதி காலையில் 51 அடி உயரம் உள்ள கொடிகம்பத்தில் பழனிசாமி அதிமுக கொடியெற்றி வைத்துவிட்டு சென்றுவிடுகிறார். பிறகு மாலை 4 மணி வரை இசைநிகழ்ச்சி, பட்டிமன்றம், பேச்சு அரங்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மாலை வரை நடக்கிறது. மாலை 4 மணிக்கு மீண்டும் வரும் அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி மற்றும் அக்கட்சி தலைவர்கள் தொண்டர் மத்தியில் மாநாட்டு மேடையில் பேசுகிறார்கள். மாநாட்டுக்கு மொத்தம் 10 லட்சம் பேர் வருவார்கள் என அதிமுக தலைமை எதிர்பார்க்கிறது. இதற்கு முன், 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன் அதிமுக எதிர்கட்சியாக இருந்தபோது ஜெயலலிதா மதுரை, கோவை, திருச்சி போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மாநாடு போல் பிரமாண்ட கூட்டத்தை காட்டி தமிழக அரசியலில் தனக்கான செல்வாக்கை காட்டினர். அந்த தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியைப்பிடிக்க அதுபோன்ற பிரமாண்ட கூட்டங்கள் முக்கிய காரணமானது. அதுபோலவே எடப்பாடி பழனிசாமி,

வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன் மக்கள் மத்தியில் தனக்கான செல்வாக்கை நிரூபிக்க பிரமாண்ட கூட்டத்தை காட்ட திட்டமிட்டு முதற்கட்டமாக பரிசோதனை முயற்சியாக மதுரையில் மாநில மாநாட்டை நடத்துகிறார். அவரது இந்த திட்டம், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்பது இந்த மாநாட்டிற்கு பிறகு தெரிய வரும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in