ஈ

டெண்டர் முறைகேடு வழக்கில் ஈபிஎஸ் கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

ஈபிஎஸ்க்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கில்  தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்ற அவர் தரப்பு கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்றம்  மறுத்துவிட்டது.

தமிழகத்தில்  கடந்த அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில்  4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக திமுக குற்றம்சாட்டியது.  2018-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஈபிஎஸ் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈபிஎஸ்க்கு எதிரான இந்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஈபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில்  மனு தாக்கல்  செய்யப்பட்டது.  அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,  சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே லஞ்ச ஒழிப்பு துறை ஆரம்ப கட்ட விசாரணை நடத்தியுள்ளதால், அவர்களே விசாரணையை தொடரட்டும் எனத் தெரிவித்து மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ள ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ அனுமதி கோரினார்.

ஆனால் அதற்கு  எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் கவுதம், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ஏற்கெனவே இந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, விஜிலென்ஸ் கமிஷனருக்கு அறிக்கை அளித்துள்ளதாகவும், விஜிலென்ஸ் கமிஷனர் அறிக்கையின் அடிப்படையில் விசாரணையை தொடர்வது குறித்து முடிவெடுக்கப் படும் என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் மீது விஜிலென்ஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்காத வகையில் தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரினார். அதற்கு  அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா இதில்  எந்த ஒரு தடை உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தரப்பு வேண்டுகோளை  ஏற்க மறுத்து மனு மீதான விசாரணையை செப்டம்பர் 26-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in