தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் நவம்பர் 6-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு அனுமதி வழங்கியது குறித்து நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்  அந்த  அமைப்பினர் 50-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன்  அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதி வழங்கவில்லை என காவல்துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் கடந்தமுறை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, சமூக விரோதிகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுச்சொத்துகளை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளதாக மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  

இதையடுத்து,  நவம்பர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று  ஊர்வலத்தை நடத்தும்படி ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு உத்தரவிட்டதுடன், அதற்கு காவல்துறை அனுமதி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். மேலும், அக்டோபர் 31-ம் தேதிக்குள் அனுமதி வழங்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஒவ்வொரு மாவட்டங்களிலும்  நிலவும் சூழ்நிலை, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து இடையூறு, ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நிபந்தனைகளை விதித்து நவம்பர் 6-ம் தேதி ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்க அனைத்து மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளாதாக காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு அனுமதியளிக்க வேண்டும் என டிஜிபி உத்தரவில் கூறப்பட்டுள்ளதால், நீதிமன்ற உத்தரவை மீறி, பல மாவட்டங்களில் ஊர்வலத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுக்க வாய்ப்புள்ளதால், இந்த வழக்கை முடித்து வைக்கக்கூடாது என ஆர்எஸ்எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவிட்டப்படி ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய  காவல்துறைக்கு உத்தரவிட்டார். அன்றைய தினம் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்றமே தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in