நாடாளுமன்றத்தில் சில வார்த்தைகளைப் பேசக் கூடாது என வெளியான செய்திகளுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்றத்தில் எந்த வார்த்தைக்கும் தடைவிதிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் எம்பிக்கள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டிருந்தது. அதில், ஊழல், நாடகம், கபட நாடகம், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, வாய் ஜாலம் காட்டுபவர் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் எந்த வார்த்தைகளுக்கும் தடைவிதிக்கவில்லை என மக்களவை சபாநாயகர் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “சில வார்த்தைகள் நாடாளுமன்றத்தில் பேசத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. நாடாளுமன்றத்தில் எந்த வார்த்தைக்கும் தடைவிதிக்கப்படவில்லை. கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தின் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளின் பட்டியலே தற்போதும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் புத்தக வடிவில் வெளியான வார்த்தை தொகுப்புகள், காகிதங்களைச் சேமிக்கும் வகையில் மின்னணு முறையில் வெளியிடப்பட்டுள்ளன ” என்றார்.