ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் சம அந்தஸ்துள்ள பொய்யர்கள் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, தேசிய தலைநகரில் நிலவும் தண்ணீர் விநியோகம், குப்பை மேலாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அசாதுதீன் ஓவைசி கடுமையாக விமர்சனம் செய்தார். டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக்கில் அவர் ஆற்றிய உரையில், “பில்கிஸ் பானோ வழக்கு, பொது சிவில் சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் கேஜ்ரிவால் அமைதியாகவே இருக்கிறார். யார் பெரிய பொய்யான தகவல்களைச் சொல்கிறார்கள் என்பதில் போட்டி இருந்தால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கேஜ்ரிவால் என இருவருமே சமமானவர்கள் என்று நான் நினைக்கிறேன்.
இந்த டெல்லி முதல்வர்தான் 2020 இல் நகரத்தில் நடந்த ஷாகின் பாக்கில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த கலவரங்களைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர் மகாத்மா காந்தியின் சிலை அருகே அமர்ந்து போராட்டம் நடத்தினார். லக்ஷ்மி-கணேஷ் போட்டோக்களை ரூபாய் நோட்டில் போடுவது பற்றி கூட, தனது மூத்த சகோதரரிடம் இளைய சகோதரர் வேண்டுகோள் விடுக்கிறார். இளையவர் தனது அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதில் மூத்த சகோதரர் மகிழ்ச்சியடைகிறார் ”என்று கேஜ்ரிவால் மற்றும் மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் தாக்கினார்.
பாஜக தற்போது டெல்லி மாநகராட்சியை கைவசம் வைத்துள்ளது. டிசம்பர் 4ம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் எப்படியும் டெல்லி மாநகராட்சியில் வெற்றிபெற வேண்டும் என கேஜ்ரிவால் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.