
அண்மையில் திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணனின் முகநூல் பக்கம் திடீரென்று முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரித்துள்ளார்.
திமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன். காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துக்கள் காங்கிரஸுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அதனால். அந்த கருத்துக்கள் திமுகவின் நிலைக்கு எதிராக இருப்பதாக கூறி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் வருத்தம் அடைந்த கே.எஸ். ராதாகிருஷ்ணன் கட்சி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் திமுகவையும் திமுக தலைவர்களையும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார். முதல்வர் ஸ்டாலினுக்குத் திறந்த மடல்களையும் அவர் எழுதினார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நேற்று பதவியேற்றதைக் கூட கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் அவருடைய முகநூல் பக்கம் திடீரென இன்று முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர், " என்னுடைய முகநூலில் 90 ஆயிரம் பேர் நண்பர்களாக உள்ளனர். முகநூல் சுவரை 18 ஆயிரம் பேர் பின்தொடர்ந்தனர். இந்த நிலையில் என்னுடைய முகநூல் திடீரென்று முடக்கப்பட்டு விட்டது. எனவே, இப்போது Radhakrishnan.K.S. என புதிய முகநூல் கணக்கைத் தொடங்கியுள்ளேன். அதில் நண்பர்கள் தொடரலாம்" என்று தெரிவித்துள்ளார்.
திமுகவையும், திமுகவினரையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்ததால் புகாரின் பேரில் அவரது முகநூல் பக்கம் முடக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.