ஈஷா மையத்தில் சுபஸ்ரீ உயிரிழந்துள்ளார். அதில் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய நடிகை குஷ்பு, சட்டம் அனைவருக்கும் சமம். ஈஷாவுக்கு என்று ஒரு சட்டம் நமக்கு என்று ஒரு சட்டம் எதுவும் கிடையாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் கூறுகையில்,” தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தமிழக முதல்வர் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவது போல் செயல்படுகிறார். ஈஷா மையத்தில் சுபஸ்ரீ உயிரிழந்துள்ளார். அதில் முறையாக விசாரணை நடத்த வேண்டும்.
சட்டம் அனைவருக்கும் சமம் ஈஷாவுக்கு என்று ஒரு சட்டம் நமக்கு என்று ஒரு சட்டம் எதுவும் கிடையாது. முறையாக விசாரணை நடைபெற வேண்டும். சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியே செல்லும்போது அமைச்சர் பொன்முடி போயா என்று இழிவாக பேசி உள்ளார். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? மற்றவர்களைத் தரக்குறைவாக இழிவாக பேசுவது தான் திராவிடமாடலா? நாட்டில் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமை ஆவது குறித்து மத்திய அரசு, மாநில அரசு மட்டுமல்ல அனைவரும் ஒன்றிணைந்து தான் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.