திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது டெல்லி தேசிய மகளிர் ஆணையத்தில் நடிகை குஷ்பு புகார்!

திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது டெல்லி தேசிய மகளிர் ஆணையத்தில் நடிகை குஷ்பு புகார்!

திமுக பேச்சாளர் சைதை சாதிக் அவதூறு பேச்சிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை குஷ்பு டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை கே.கே.நகரில் திமுக சார்பில் கடந்த அக்டோபர் 26-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சைதை சாதிக் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி மன்னிப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கோரி பாஜக மகளிர் அணியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 29-ம் தேதி புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சைதை சாதிக் மீது ஆபாசமாக பேசுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

இதையடுத்து இன்று தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா ஷர்மாவை சந்தித்த குஷ்பு, சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, “நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள், பெண்களைப் பற்றி ஒரு போதும் தவறாகப் பேசமாட்டார்கள். அப்படி யாராவது தவறாகப் பேசினாலும், அதை கேட்டு ரசிக்க மாட்டார்கள். தேசிய மகளிர் ஆணையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர்கள் விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in