‘நாடும் நீங்களும்...!' - முதல்வர் ஸ்டாலினுக்கு கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் அடுத்த மடல்

‘நாடும் நீங்களும்...!' - முதல்வர் ஸ்டாலினுக்கு கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் அடுத்த மடல்

திமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்,  திமுகவுக்கு அவர் ஆற்றிய பணிகள் குறித்து நினைவுபடுத்தி ‘குறையொன்றுமில்லை’ என்ற தலைப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திறந்த மடலை  எழுதிவருகிறார். அதன்படி  இன்று தனது நான்காவது மடலை  எழுதி வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் எழுதியிருக்கும் வாசங்கள் கீழே:

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு!

முள்ளிவாய்க்கால் துயரத்துக்குப் பிறகு, ஆட்சியில் இருந்த திமுக மீது, கடுமையான எதிர்வினைகளை ஆற்றியவர்கள் இன்று தோழமையாக இருக்கிறார்கள். நல்லதுதான்.

முள்ளிவாய்க்கால் துயரத்துக்குப் பின் நான் திமுகவில் இணைந்து,  பல விமர்சனங்களுக்கு மத்தியில் அடியேனின் முழு முயற்சியில் டெசோ நடத்தியது உங்களுக்கும் நன்கு தெரியும். ஜெனிவா மனித உரிமை ஆணையம் - ஐநாவில் - ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பேச இரண்டு முறை தாங்களும் நானும் பயணத் திட்டமிட்டதும், கடைசி நிமிடத்தில் தாங்கள் இயலாது என்றதும் தங்களுக்குத் தெரியும்.  ஜெனிவா மனித  உரிமை ஆணையத்தில் திமுக தலைவர் கலைஞரின் கருத்துக்களாக அடியேன் வைத்தது  ஐநா அவையின்  ஆண்டறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை இன்று தங்களோடு பொறுப்பில் உள்ள எவராவது செய்திருக்க முடியுமா, இயலுமா?

சற்று பின்னோக்கிய நினைவலைகள் மனதிலாடுகின்றன.

1989 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தலைவர் கலைஞரும், முரசொலி மாறனும்  என்னை அழைத்தார்கள்.  

கரூர் அடங்கிய திருச்சி மாவட்டம்,  தஞ்சை மாவட்டம், நாகை மாவட்டம், கடலூர், விழுப்புரம் அடங்கிய தென்னாற்காடு மாவட்டம், ஒன்றுபட்ட செங்கல்பட்டு மாவட்டம், திருவண்ணாமலை அடங்கிய வேலூர் மாவட்டம்,  நாமக்கல் அடங்கிய சேலம் மாவட்டம், ஈரோடு மாவட்டம், திருப்பூர் அடங்கிய கோவை மாவட்டம், நீலகிரி மாவட்டம் இவை உள்ளடங்கிய சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது…வேட்பாளர்கள் சரியானவர்கள் யார், சாதக பாதகங்கள் என்னென்ன என அறிந்து வந்து அறிக்கை தரும்படி பணித்தார்கள்.

அது  அம்பாசிடர் கார் காலம். எனது அம்பாசிடர் காரில் 1988-ல் ஆறு மாத காலத்துக்கும் மேலாக இந்த பகுதிகளில் எல்லாம் தொகுதி தொகுதியாக சுற்றி வந்து ஆய்வு செய்தேன்.  இறுதியில் எனது அறிக்கையை தலைவர் கலைஞரிடம் சமர்ப்பித்தேன். ஏதோ போகிறபோக்கில் நான் சொல்வதாக நினைக்க வேண்டாம். இதற்கு சாட்சியாக வைகோவே இருக்கிறார்.

அடியேனின் இந்த சுற்றுப்பயண  அறிக்கையில் எழுதிக்கொடுத்த பெயர்கள்தான் திருச்சி கே.என். நேரு,  விழுப்புரத்தில் பழனியப்பனுக்கு மாற்றாக தெய்வசிகாமணி என்று அழைக்கப்பட்ட இன்றைய பொன்முடி, அச்சரப்பாக்கம் ராமகிருஷ்ணன்,  இன்றைக்கு பாஜகவில் இருக்கிறாரே வி.பி.துரைசாமி…இப்படி அந்த பட்டியல் மிக நீண்டது. இதையெல்லாம் இன்று சொன்னால்தான் தெரியும். என்ன சொல்வது!

கே.என்.நேருவுக்கு அன்று அன்பிலும் செல்வராஜும் எதிர்வினையாற்றினார்கள். பொன்முடி விசயத்தில் பட்டும் படாமல் விலகி இருந்தார் செஞ்சி ராமச்சந்திரன். ராமகிருஷ்ணனுக்கு வாய்ப்பு தரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் இருந்தார் மதுராந்தகம் ஆறுமுகம் என்பதெல்லாம் வேறு விஷயம்.

தங்களது வேளச்சேரி வீட்டில்,  காவல் துறை அதிகாரி சைலேந்திரபாபு சார்ந்த காவல்  துறையினர் நள்ளிரவில் செய்த துவம்சங்கள்... அப்போதும் எனது பணிகள்...

கலைஞரின் நள்ளிரவு கைது  துயரச் சம்பவத்தின்போது அடியேன் ஆற்றிய பணிகளை ஏற்கெனவே நினைவுகூர்ந்து இருக்கிறேன். அதையொட்டி நினைவுக்கு வந்த இன்னொரு சம்பவம்... 

யாரும் எட்டிப் பார்க்காத  அந்த நேரத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற டெல்லியில் இருந்து வந்த அகில இந்திய அரசியல் தலைவர்களிடம்  தொடர்புகொண்டு பேசினேன்... அவர்களை பேராசிரியர் அவர்களிடம் அழைத்துக்கொண்டு சென்று சந்திக்கவும் வைத்தேன்..

இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து கடற்கரையில் நடந்த கண்டனப் பேரணியில் பத்திரிகையாளர்கள் கழகத்தினர் கடுமையாகத் தாக்கப்பட்டனர். கோவை குடிமங்கலத்தைச் சார்ந்த நிர்வாகி இந்தத் தாக்குதலில் பலி. மாலைப் பொழுதில் கூட்ட கடற்கரை மேடையில் கவலையுற்று இருந்தார் கலைஞர்.  அண்ணன் மாறன்  அடியேனிடம் சொல்ல, மேடையில் இருந்தே அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன்  அவர்களிடமும்,  அன்றைய ஜெயலலிதா ஆட்சியில் உள்துறைச் செயலாளராக இருந்த நரேஷ்  குப்தாவிடமும் நிலையை எடுத்துச் சொல்லி என் செல்போனில் இருந்து பேசினேன். யாரும் தயாராக இல்லாத நிலையில்  தயக்கம் இன்றி உடனே பேசி,  நிலைமையைச் சொன்னேன். 

இதெல்லாம் இன்றைக்கு உள்ள அமைச்சர்கள் எத்தனை பேருக்கு தெரியும்? ஏனென்றால் இவர்களில் பலர் அன்று அரசியல் களத்தில்  இருந்தார்களா என்று தெரியாது.

கடந்த 2016 வரை திமுக மீதும் தலைவர் கலைஞர் மீதும் கடுமையாக தவறாக விமர்சனம் செய்தவர்களுக்கு எல்லாம் இன்று பாடப் புத்தக நிறுவனத்தில் பொறுப்புகள். திட்டக்குழுவில் பொறுப்புகள். கலைஞர் தொலைக்காட்சியில் பொறுப்புகள். கழக நிர்வாகத்தில்  பொறுப்புகள் என அள்ளிக் கொடுத்தீர்கள். 

இப்படி எதிராக இருந்தவர்கள் பலருக்கும் பல பொறுப்புகள்.. நியமனங்கள்.  நான் இவ்வளவு செய்தும் மதிப்பும் மாண்பும் எனக்குக் கிடையாது. என்னதான் நடக்கிறது?

நான் பொது வாழ்க்கையில் இழந்தது அதிகம். பெற்றது ஒன்றுமில்லை.  இனி எவ்வளவோ இருக்கிறது. கடிதம் வாயிலாக தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடும் நீங்களும் உங்கள் கொற்றமும்  வாழ்க என்று வாழ்த்தி என் பாதையில், என் வழியில் சுதந்திரமாக  ஜீவிக்க வழி அமைத்ததற்கு கோடி நன்றிகள்..! 

குறையொன்றுமில்லை... மகிழ்ச்சி. இத்தோடு  இதை நிறைவு செய்கிறேன்.

நன்றி...

- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in