'மற்றபடி  குறையொன்றும் இல்லை': முதல்வர் ஸ்டாலினுக்கு கே.எஸ்.ராதாகிருஷ்ணனின்  திறந்த மடல்

'மற்றபடி குறையொன்றும் இல்லை': முதல்வர் ஸ்டாலினுக்கு கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் திறந்த மடல்

திமுகவிலிருந்து  அண்மையில் விலக்கப்பட்ட கட்சியில் செய்தித் தொடர்பாளர்  கே எஸ் ராதாகிருஷ்ணன்,  தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திறந்த மடலை  எழுதியிருக்கிறார். அதில், கடந்த காலத்தில் திமுகவுக்காக ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்து, அதனால் குறை ஒன்றும் இல்லை என்று அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், " மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இந்த கருத்துக்களை வைக்கிறேன். தங்களுக்கு நன்றாக தெரியும். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற நான் உழைத்தது. இதை திமுக பொதுக்குழுவிலேயே மறைந்த முரசொலி மாறன் சிலாகித்து பேசினார். கலைஞர் நள்ளிரவில் அராஜகமாக கைது செய்யப்பட்ட போது, அந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ கேசட்டை இரவோடு இரவாக சன் டி.வியி்ல் ஒப்படைத்து ஒளிபரப்பப் செய்தது,அந்த கொடுமையை மாநில மனித உரிமை அமைப்புக்குக் கொண்டு சென்றது, குயின் மேரிஸ் விவகாரத்தில் தங்களை காவல்துறை கைது செய்து கடலூர் சிறைக்குக் கொண்டு சென்றபோது இரவு முழுதும் உடன் இருந்தது, என் மீதும் எஃப்ஐஆரில் என் பெயர் சேர்க்கப்பட்டு சைதை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்த விஷயத்தையும் மாநில மனித உரிமை கழகத்துக்குக் கொண்டு செல்ல மரியாதைக்குரிய தங்களது துணைவியாரை அழைத்துச் சென்று நடவடிக்கை எடுக்க உழைத்தது.

1984 – 85-ம் ஆண்டு முதல் டெசோ  மற்றும் அது தொடர்பான பணிகளில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உழைத்தது. 1985ல் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் மீதான கப்பல் விவகார ஊழல் குற்றச்சாட்டு குறித்து  விரிவான அறிக்கை தயாரித்தது, இதை  முரசொலி மாறன் பாராட்டியது. இன்னொரு விஷயம் உங்களுக்குத் தெரியுமா இல்லையா என  எனக்குத் தெரியவில்லை. தலைவர் கலைஞர்  என்னை 1979-ம் ஆண்டு முதல் பெயர் சொல்லி அழைக்கும் அறிமுகம் உண்டு.

1991-ல் கலைஞருக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்திய ஒரு விஷயத்தில் தீர்வுகாண  மறைந்த என்.வி.என்.சோமு, வழக்கறிஞர் என்.கணபதி ஆகியோர் முயன்றும் இயலாத சூழலில், அடியேன் முயற்சி எடுத்து அப்பிரச்சினையை தீர்க்க ஒரு காரணமாக இருந்தது, வைகோ, விஜயா தாயன்பன்  ஆகியோருக்கு நன்கு தெரியும்.

இறுதியாக ஒரு விடயம், 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது,  21 இடங்கள் என சங்கரன்கோவில், சேரன்மாதேவி, சங்ககிரி ஆகிய தொகுகளுக்காக ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து திடுமென கூட்டணியை முறித்துக்கொண்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ‘திமுகவுடன்தான் கூட்டணி வேண்டும்’  என்று வலியுறுத்தி வெளியேறினேன்.

தனியார் நிறுவனத்தில் பணியி்ல் உள்ள ஒரு பெண்மணி, அவர்தான் அன்று கலைஞரின் உருவபொம்மையை எரித்தார். இன்று அவர் தமிழக அரசு வாரிய தலைவர். உழைப்பைக் கொடுத்த நாங்கள் இடை நீக்கம். மகிழ்ச்சி,நன்று. இப்பிரபஞ்சத்தின் அவசரங்கள் புரிகின்றன.

இவற்றை எல்லாம் சொல்லக் காரணம்; எந்த எதிர்ப்பார்ப்புகளும் இல்லை. எவ்வித நோக்கங்களும் இல்லை. தாங்கள் அறிய வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தப் பதிவு. இன்னும் சிலவற்றை  பின் சொல்கிறேன். இதையும் சொல்லவில்லை என்றால் என்னுடைய 52 ஆண்டு அரசியல் வாழ்வு ஒன்றும் இல்லை என ஆகிவிடும்.

மற்றபடி.. குறையொன்றும் இல்லை! நிம்மதியாக பொது தளத்தில் பணிகளை ஆற்ற இயலும். நேற்றைய நாளில் என்னைக் கடந்து சென்றவர்கள், இன்றைய நாளில் வேறு மாதிரித்  தோற்றமளித்தார்கள். அவர்களுக்கு நானும் அப்படித்தான்  தெரிந்திருப்பேனோ ? அவ்வளவுதான்" என எழுதியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in