கோவையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்களை அழைக்காமல், திமுக நிர்வாகிகளை வைத்து நிகழ்ச்சிகளை நடத்துவதாகக் கோவை மாவட்ட அதிமுக எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை வடக்கு எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன், வால்பாறை எம்எல்ஏ கந்தசாமி, சூலுர் எம்எல்ஏ கந்தசாமி, கிணத்துக்கடவு எம்எல்ஏ தாமோதரன் ஆகியோர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், தங்களது தொகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், அரசு நிகழ்ச்சிகளில் திமுகவினரைக் கொண்டு நடத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், மாநகராட்சி நிர்வாகம் கூறியதை மீறி திமுகவினர் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளதாகவும், அவற்றை அகற்றாவிட்டால் தாங்களும் போஸ்டர்களை ஒட்டுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோவை வடக்கு எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன், “அரசு விழாக்களுக்கான அழைப்பிதழில் தங்களது பெயர் உள்ளதாகவும், ஆனால் அந்த விழாக்களுக்கு எங்களை அழைப்பதில்லை. சட்டமன்ற உறுப்பினர்களை அவமதிப்பது தான் திராவிட மாடலா? எங்களது கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உள்ளோம். அந்த மனுவை பரிசீலிப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்” என்றார்.