ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் ஏற்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகார போக்கால் அதிமுக தனது பாரம்பரிய வாக்குகளை இழந்து வருகிறது என்றும் கொங்கு இளைஞர் பேரவைத்தலைவர் தனியரசு தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரை கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது ஆதரவை தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனியரசு, ‘’எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகாரப் போக்கால் அதிமுக தனது பாரம்பரிய வாக்குகளை இழந்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை தவிர்த்துவிட்டு, அதிமுகவை வலிமை பெறச் செய்யமுடியாது.
ஈரோடு கிழக்கில் திமுக தலைமையிலான கூட்டணி சிதறாமல் உள்ளது. ஆனால், அதிமுக சிதறிக் கிடக்கிறது. இது திமுகவுக்கே சாதகமாக முடியும். அதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் ஏற்க வேண்டும்’’ எனக் கூறினார்.