நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட போலீஸரால் தேடப்படும் முக்கிய குற்றவாளிக்கு மாவட்ட செயலாளர் பதவியை பாஜக வழங்கியது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கவர்ச்சி விளம்பரங்களைக் காட்டி மோசடியில் ஈடுபட்டதாக கடந்த மே மாதம் 24-ம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தமிழகம் முழுதும் உள்ள ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 3.41 கோடி ரூபாய் பறிமுதல் செய்து 11 வங்கிக் கணக்குகளை முடக்கம் செய்தனர். இது தொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குனர்கள் 14 பேர் மீதும், 5 ஆருத்ரா நிறுவனங்கள் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குனர் பாஸ்கர் மற்றும் மோகன் பாபு ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ள ஹரிஷ், உஷா, ராஜசேகர், செந்தில்குமார், பட்டாபிராமன், மைக்கல்ராஜ் உள்ளிட்ட சில இயக்குனர்களை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் 70 வங்கி கணக்குகள் ஆகியவற்றை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முடக்கி நடவடிக்கை மேற்கோண்டது.
இந்நிலையில் இந்த மோசடி வழக்கில் 4-வது குற்றவாளியான ஹரிஷ் தற்போது வரை தலைமறைவாக உள்ள நிலையில் அவருக்கு பாஜகவில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹரிஷூக்கு பொறுப்பு வழங்கிய பாஜக நிர்வாகி விளையாட்டு மற்றும் திறன்மேம்பாட்டு துறை மாநில தலைவர் அமர்பிரசாத்ரெட்டிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஹரிஷ் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அவரை கைது செய்ய போலீஸார் தீவி்ரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பிரபல ரவுடி கல்வெட்டு ரவி ,புளியந்தோப்பு அஞ்சலை உட்பட பலர் பாஜகவில் இணைந்துள்ள நிலையில் தற்போது மோசடி வழக்கில் சிக்கிய ஹரிஷூக்குப் பொறுப்பு வழங்கி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.