
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை கேரளாவில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்த கோவை பாஜக மாவட்ட நிர்வாகி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவை மாவட்டம், காந்திபுரம் ராம்நகர் பகுதியில் கேரளா லாட்டரி விற்பனை செய்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்து. இந்நிலையில் காட்டூர் போலீஸார் ராம்நகர் பகுதியில் உள்ள திரையரங்கு அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் கேரளா லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர், சாய்பாபா காலனியைச் சேர்ந்த சபரி என்பது தெரிய வந்தது. அவர் கேரளாவில் இருந்து லாட்டரி வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர், கோவை மாவட்ட பாஜக இளைஞரணி துணைத்தலைவராக இருப்பதும் தெரிய வந்தது. அவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.