
திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கடந்த அக் 4-ம் கட்சி சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு வந்தார். அப்போது, அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மிளகுபாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் வயிற்று வலி, வாந்தி உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன் பிறகு முத்தரசனுக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை எடுக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனை கண்காணிப்பில் முத்தரசன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்பேரில் முத்தரசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், முத்தரசனுக்கு நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
ஆனால் அவருக்கு தொடர்ந்து விக்கல், வாந்தி ஆகியவை இருந்து வந்தது. அதையடுத்து நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு சுவாசப் பாதையில் கிருமிகள் தொற்று இருப்பது தெரியவந்தது. இவற்றை நீக்குவதற்கான மருத்துவ சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்தது. பத்து நாட்களாக அவர் தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் காவேரி மருத்துவமனை சார்பில் அவரது உடல் நலம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நுரையீரல் பகுதியில் ஏற்பட்டுள்ள நோய் தொற்று முற்றிலுமாக நீக்கப்பட்டு விட்டது. ஆனாலும் இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.