
திருச்சி மத்திய சிறையில் இருக்கும் அதிமுக மேலிட தலைவர்களுக்கு நெருக்கமானவரான கரூர் பைனான்ஸியர் அன்புநாதன், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரால் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சியை அடுத்த அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் சி.பி.அன்புநாதன் (52). பைனான்ஸியரான இவர் அதிமுக மேலிட தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது அன்புநாதனுக்குச் சொந்தமான அலுவலகம், கிடங்கு, அவரது வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து பல கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 20-ம் தேதியன்று இவரை கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் பணமோசடி வழக்கு ஒன்றில் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இவ்வழக்கில் அவருக்கு நேற்று முன்தினம் ஜாமீன் கிடைத்தது. ஆனால், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் அளித்த கடிதம் காரணமாக அவர் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில் அய்யம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டராஜ் என்பவர் அவருக்கு சொந்தமான 4.5 ஏக்கர் நிலத்தை அன்புநாதன், அவரது உறவினர் பழனிசாமி உள்ளிட்ட 7 பேர் அபகரித்து கொண்டதாக கடந்த 2021-ம் ஆண்டு கரூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் திருச்சி சிறையில் இருந்த அவரை கைது செய்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நீதிபதி அம்பிகா முன் நேற்று ஆஜர்படுத்தினர். அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார். அடுத்தடுத்த வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு சிறையிலேயே வைக்கப்பட்டிருப்பது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.