மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையைக் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று திறந்து வைத்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 1.07 கோடி மதிப்பீட்டில் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கருணாநிதி சிலையை குடியரசு துணைத்தலைவர் திறந்து வைத்தார். சிலைக்குக் கீழ் உள்ள பீடத்தில் வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம், அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். இந்தி திணிப்பை எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி ஆகிய ஐந்து வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இதே போன்று ஆங்கிலத்திலும் அந்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவிற்குக் கவிஞர் வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வந்திருக்கிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கச் சென்னை வந்திருந்தார் பிரதமர் மோடி. அப்போது பிரதமர் அமர்ந்திருந்த மேடையிலேயே முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். இது தமிழக அரசியலில் அனலைக் கிளப்பியது. இந்த நிலையில் இன்று துணைக் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டி விழாவில் ஸ்டாலின் என்ன பேசுவார் என அரசியல் விமர்சகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகிறார்கள்.