கர்நாடகாவில் வரும் டிசம்பர் மாதம் முதல் அறநெறிக் கல்வி இயக்கத்தின் ஒரு பகுதியாக பகவத் கீதை பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கீதை கற்பித்தலை ஏன் அமல்படுத்தவில்லை என்பதை மாநில அரசு தெரிவிக்க வேண்டும் என்று பாஜக எம்எல்சி எம்கே பர்னேஷ் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ், பகவத் கீதையை தனிப் பாடமாக அறிமுகப்படுத்தும் திட்டம் பசவராஜ் பொம்மை அரசுக்கு இல்லை என்று கூறினார். மேலும், "பகவத் கீதையை பள்ளிகளில் அறநெறி கல்வியின் அடிப்படையில் அறிமுகப்படுத்துவது பற்றி எங்கள் அரசு ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே ஒரு குழு அதைச் செயல்படுத்தி வருகிறது, டிசம்பர் முதல் இதனை மாநிலம் முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால், இது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை. போதனைகளின் அடிப்படையிலான தேர்வு" என்று பதிலளித்தார்.
முன்னதாக கடந்த மார்ச் மாதம், 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஒழுக்கக் கல்வி இயக்கத்தின் ஒரு பகுதியாக பகவத் கீதையைச் சேர்க்க தனது அரசாங்கம் பரிசீலித்து வருவதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா, “ பள்ளிகளில் மாணவர்களுக்கு பகவத் கீதை, குரான் அல்லது பைபிள் உள்ளிட்ட புனித நூலை அறநெறிக் கல்வியாகக் கற்பிப்பதில், எங்கள் கட்சிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் தரமான கல்வியை உறுதி செய்வதில் அரசு முதலில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்