காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ‘பாரத் ஜோடோ யாத்திரை’யில் பங்கேற்றது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சனம் செய்துள்ளார்.
கர்நாடகாவில் சோனியா காந்தி மேற்கொண்ட நடைபயணம் குறித்து பேசிய அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, “இயற்கையாக அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் சொந்த கட்சிக்காக வேலை செய்வார்கள், அவர் அரை கிலோமீட்டர் தூரம் நடந்துவிட்டு சென்றுவிட்டார், பரவாயில்லை.
எங்களைப் பொறுத்த வரையில் எங்களுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தற்போது நடைபெற்று வரும் காங்கிரஸின் நடைபயணம் மாநிலத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்று அவர் கூறினார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸின் யாத்திரையை எதிர்கொள்ள பாஜக அதிகளவிலான பேரணிகளைத் திட்டமிடுவதாகக் கூறப்படும் செய்திகளையும் கர்நாடக முதல்வர் பொம்மை நிராகரித்தார். இது தொடர்பாக பேசிய அவர், “நான் முன்பே கூறியது போல், பாஜக சார்பில் ஆறு பேரணிகள் நடக்கும். இதனை நாங்கள் முன்பே திட்டமிட்டிருந்தோம்" என்று அவர் கூறினார்.
மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுராவில் நடந்த யாத்திரையில் சோனியா காந்தி இன்று ராகுல் காந்தியுடன் கலந்து கொண்டார். கட்சித் தொண்டர்களின் ஆரவாரம் மற்றும் முழக்கங்களுக்கு மத்தியில் தனது மகன் ராகுல் காந்தி மற்றும் பிற தலைவர்களுடன் அவர் நடந்து சென்றார். உடல்நலக்குறைவு காரணமாக சிறிது தூரம் நடந்து சென்ற சோனியா காந்தியை, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் காரில் ஏறுமாறு வற்புறுத்தி அனுப்பி வைத்தனர்.