`அமித் ஷாவின் பேச்சு நாட்டை பிரிக்கத்தான் பயன்படும்'

கொந்தளித்த தமிழக எம்பிக்கள்
`அமித் ஷாவின் பேச்சு நாட்டை பிரிக்கத்தான் பயன்படும்'

"ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்" என்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை தமிழக எம்பிக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

டெல்லியில் நடந்த நாடாளுமன்ற அலுவல் மொழி குழு கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசை நடத்துவதற்கான அலுவல் மொழியாக இந்தியை பயன்படுத்த பிரதமர் முடிவு செய்துள்ளதாகவும் இதன் மூலம் அம்மொழியின் முக்கியத்துவம் கூடும் என்றும் அமைச்சரவையின் செயல்பாடுகள் 70 சதவீதம் இந்தி மொழியிலேயே இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கான மொழியாக இந்தியை பயன்படுத்துவதற்கான நேரம் நெருங்கிவிட்டதாகவும் வெவ்வேறு மாநிலத்தவர்கள் தங்களுக்குள் பேசும் போது பயன்படுத்தும் மொழி இந்த நாட்டின் மொழியாக இருக்க வேண்டும் என்றும் அமித் ஷா கூறினார்.

இந்நிலையில், அமித் ஷாவின் பேச்சு தமிழக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரியணையில் யார் உட்காருவது ஆங்கிலமா? இந்தியா? என்றால் எங்கள் பதில் எட்டாவது அட்டவணையின் 22 மொழிகளுமே. ஹிந்தியைத் தவிர மற்ற மொழிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதும், ஆங்கிலத்தை அகற்றுவதுமே ஒன்றிய அரசின் தந்திரம். தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in