காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இன்று அவரது இல்லத்தில் சந்தித்து ஒரு மணி நேரம் உரையாடினார். நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் கமல் பங்கேற்றார்.
டிசம்பர் 24ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற இந்திய ஒற்றுமைப் பயணத்தில் ராகுல் காந்தியுடன் கமல்ஹாசனும் இணைந்தார். இந்த சூழலில் கமல், ராகுல் காந்தியை அவரின் இல்லத்தில் சந்தித்துள்ளார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மநீம தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மக்கள் நலனுக்காகவும், தேச ஒற்றுமைக்காகவும், சக இந்தியனாக 'பாரத் ஜோடோ யாத்திரையில்' பங்கேற்றமைக்காக மநீம தலைவருக்கு நன்றி தெரிவித்தார் ராகுல்காந்தி. ஒரு மணி நேரத்திற்குமேல் நீடித்த உரையாடலின்போது, இந்திய அரசியல் சாசனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள், மக்களிடையே பிளவையும், வெறுப்பையும் பரப்பும் மதவாத அரசியலுக்கு மாற்றாக, ஒற்றுமை, அன்பை விதைக்கும் காந்திய அரசியலின் அவசியம் குறித்தான தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களின் நலனைப் பாதுகாத்தல், கிராம சுயாட்சி, மொழித் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதித்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.