
கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக மாவட்ட துணைச்செயலாளர் ரவி, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக கூறி அவரை கட்சியிலிருந்து நீக்கி அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பாலமேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாவட்ட தலைவர் அருள் தலைமையில் அண்மையில் கட்சியின் நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜகவின் முக்கிய பிரிவான சக்தி கேந்திரா எனும் பிரிவிற்கு துணைத் தலைவர் பதவிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற இருந்தது.
புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பாக நடைபெற்ற வாக்குவாதத்தில் பாஜகவின் கிழக்கு ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் ஆதரவாளர்கள் ஒரு பிரிவாகவும், மாவட்ட பொதுச் செயலாளர் ரவியின் ஆதரவாளர்கள் ஒரு பிரிவாகவும் பிரிந்து வாக்குவாதம் மற்றும் கைகலப்பில் ஈடுபட்டனர்.பின்பு நாற்காலிகளாலும், உருட்டு கட்டைகள், இரும்பு ராடுகளாலும் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த மோதல் காட்சிகள் தமிழகம் முழுவதும் வேகமாக பரவியது. அதனையடுத்து இந்த கலவரத்திற்கு காரணமான கள்ளக்குறிச்சி மாவட்ட துணைச்செயலாளர் ஆரூர் ரவி என்பவரை கட்சியில் இருந்து நீக்கம் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ," கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து ஆரூர் ரவி நீக்கப்படுகிறார். ஆகவே, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்" என அறிவுறுத்தியுள்ளார்.