
திராவிட இயக்க பேச்சாளர் நெடுஞ்செழியன் வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று மருத்துவமனையில் காலமானார்.
திராவிடப் பேச்சாளரும், முன்னாள் பேராசிரியருமான முனைவர் க.நெடுஞ்செழியன் இளம் வயதிலிருந்தே திராவிட அரசியல் பற்று கொண்டவர். திராவிட இயக்கத்துக்குத் தேவையான வரலாறு, அரசியல், தத்துவ நூல்களை எழுதித்தரும் பேராசிரியர்களில் ஒருவராக அவர் இருந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பேராசிரியராக பணியாற்றியவர். இவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடமிருந்து சமீபத்தில் 2021-ம் ஆண்டிற்கான செம்மொழி விருது பெற்றிருந்தார். திமுகவில் இணையாமலேயே வெளியிலிருந்து திமுக கொள்கைக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்துள்ளார்.
வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் உள்ள அவரின் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மரியாதை செலுத்தினார். இறுதி அஞ்சலிக்காகச் சொந்த ஊரான திருச்சிக்கு நெடுஞ்செழியனின் உடல் கொண்டு செல்லப்படுகிறது.