அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால் திமுகவுக்கு செல்வதாக வாட்ஸ் அப், யூ டியூப் சமூகவலைதளங்களில் செய்தி பரவியது. இந்நிலையில் இந்த பொய்யான செய்தியைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பச்சைமால் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.
அதிமுகவில் நீண்டகாலம் மாவட்ட செயலாளராக இருந்தவர் பச்சைமால். கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் வனத்துறை அமைச்சரும் ஆனார். இப்போது அதிமுகவில் அமைப்புச் செயலாளராக இருக்கும், பச்சைமால் திமுகவுக்குச் செல்வதாக சமூகவலைதளங்களில் பரவியது.
இந்நிலையில் கே.டி.பச்சைமால் இதுதொடர்பாகக் குமரி மாவட்ட எஸ்.பியை சந்தித்து புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், “நான் அதிமுகவில் ஆரம்பகால உறுப்பினர் முதல் அமைச்சர்வரை பதவி வகித்துள்ளேன். இப்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையின்கீழ் அதிமுக அமைப்பு செயலாளராக பணியாற்றி வருகிறேன். எனக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில், நான் திமுகவின் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் தலைமையில் திமுகவுக்குச் செல்வதாக என் படத்தையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தையும் இணைத்து யூடியூப் சேனல்களில் யாரோ அவதூறாக பரப்பிவருகிறார்கள். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ”என புகார் கொடுத்துள்ளார்.