பெண் என்றும் பாராமல் கொடூரமான முறையில் ஜெயலலிதாவை தாக்கினார்கள்; அவையில் நானும் இருந்தேன் - ஈபிஎஸ் சீற்றம்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

’’1989ம் ஆண்டு சட்டப்பேரவையில் அம்மா அவர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை. சம்பவம் நடந்தபோது நானும் சட்டப்பேரவையில் இருந்தேன் என்ற முறையில் இதைக் கூறுகிறேன். அம்மாவுக்கு நிகழ்ந்த கொடுமையை ஸ்டாலின் கொச்சைப்படுத்துகிறார்’’ என தமிழக எதிர்கட்சித் தலைவர் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.  

ஈபிஎஸ்
ஈபிஎஸ்

வருகிற ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக பொன்விழா ஆண்டு மாநாடு மதுரை வளையங்குளம் பகுதியில் நடைபெற உள்ளது. அந்த இடத்தை ஆய்வு செய்து விட்டு சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்: ‘’1989 ல் நடைபெற்ற சம்பவம் ஞாபகம் வந்து அதை வெளிப்படுத்தியுள்ளதாக மக்கள் பார்க்கிறார்கள். மணிப்பூர் சம்பவத்தை ஒட்டி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் போட்டனர். எம்பி கனிமொழி இதில் சில கருத்துக்களைச் சொன்னார். அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 89ம் ஆண்டு சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வை குறித்து பேசினார்.

அப்போது நானும் சட்டமன்ற உறுப்பினராக அங்கு இருந்தேன் அந்த அடிப்படையில் அதை நான் இங்கு தெரிவிக்கிறேன். சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் முன்னிலையில் எதிர்க்கட்சியின் தலைவர், பெண்ணென்றும் பாராமல் ஜெயலலிதா மீது கொடூர தாக்குதல் நடைபெற்றது.

அப்போதைய முதல்வர் கருணாநிதி கண்ணெதிரே ஒரு பெண் மீது நடைபெற்ற தாக்குதல் நடைபெற்றதற்கு என்ன தண்டனை கொடுத்தார்கள். ஆனால் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்து ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய போது மீண்டும் முதல்வராகத்தான் இங்கு வருவேன் என்று சபதம் செய்து அதை நிறைவேற்றினார். இன்றைய தினம் முதலமைச்சர் பொய்யான செய்தியை சொல்கிறார். சட்ட பேரவையில் முதல்வர் கருணாநிதி பேசியதற்கு அம்மா பதிலளிக்க முற்பட்ட போது தான் இந்த கொடூர தாக்குதல் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் போது கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருநாவுக்கரசு உள்ளிட்டோர் தடுத்தனர். தற்போது முக்கிய அமைச்சராக இருப்பவர் அம்மாவின் சேலையை பிடித்து இழுத்தார். ஒரு சில அமைச்சர்கள் அவரை கடுமையாக தாக்கினார்.

சட்டப்பேரவையில் கருப்பு தினமாக அந்த நாளை பார்க்கிறேன். சட்டமன்றத்தில் இப்படிப்பட்ட சம்பவம் பெண் சட்டமன்ற உறுப்பினருக்கு நடைபெற்றது இல்லை. ஆனால் இப்போது முதல்வர் இதை கொச்சைப்படுத்தி பேசுகிறார்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in