ஆளாளுக்கு ஒரு வேனை எடுத்துக் கொண்டு டூர் போகிறார்கள்: சசிகலா சுற்றுப்பயணத்தைக் கலாய்த்த ஜெயக்குமார்!

ஆளாளுக்கு ஒரு வேனை எடுத்துக் கொண்டு டூர் போகிறார்கள்: சசிகலா சுற்றுப்பயணத்தைக் கலாய்த்த ஜெயக்குமார்!

நமது அம்மா நாளிதழின் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ், நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பல்வேறு குற்றச் சாட்டுகளை வைத்தார். அவருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கூலிக்கு மாரடிக்கிற பணியைத்தான் மருது அழகுராஜ் எப்போதும் செய்து கொண்டிருக்கிறார். பலகட்சிகளில் பணியாற்றிவிட்டுத்தான் நமது எம்ஜிஆரில் பொறுப்பாசிரியர் பணிக்குச் சேர்ந்தார். நமது எம்ஜிஆர் நாளிதழில், நிதி கையாடல் முறைகேடு செய்ததால்தான் அவர் விளக்கி வைக்கப்பட்டார். பிறகு நமது அம்மா நாளிதழிற்குப் பொறுப்பாசிரியராக வந்த பிறகாவது கையாடல் என்கிற வாலைச் சுருட்டிக் கொண்டு ஒழுங்காக இருந்திருக்கலாம். நமது அம்மாவில் வரக்கூடிய விளம்பர பணத்தைக் கையாடல் செய்திருக்கிறார். அதிமுக சட்ட திட்ட நெறிகளின்படி தான் பொதுக்குழு நடைபெற்றது. கட்சியின் மீது களங்கத்தைச் சுமத்தும் வகையில் மருது அழகுராஜ் பேட்டி அளிக்கிறார். ஈபிஎஸ் முதல்வராகப் பதவி ஏற்ற இரண்டு மாதங்களில் கொடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில் போர்க்கால நடவடிக்கை எடுத்தார் ஈபிஎஸ். ஆனால் அவர்களை திமுகவினர்தானே ஜாமீன் எடுத்தார்கள். குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஒரு வழக்கறிஞர் டீமையே அனுப்பியதை மருது அழகுராஜ் ஏன் குறிப்பிடவில்லை?

சசிகலா மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் கட்சிக்குள் வரக்கூடாது எனத் தர்மயுத்தம் நடத்தியவர் ஓபிஎஸ். ஆனால் டிடிவியை மறைமுகமாக ஓபிஎஸ் சந்தித்ததை ஏன் மருது அழகுராஜ் தெரிவிக்கவில்லை. ஆறுமுக ஆணையத்தில் நடைபெற்ற விசாரணையில் சசிகலாவிற்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார் ஓபிஎஸ். அப்போது தனிப்பட்ட முறையில் அவரைப் பிடிக்கும் எனச் சொல்கிறார். இதையெல்லாம் பத்திரிகை ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் ஏன் விமர்சிக்கவில்லை? திமுக ஆட்சியில் நடைபெற்ற அண்ணாநகர் ரமேஷ், சாதிக்பாஷா உள்ளிட்டோரின் படுகொலைகளையும் திமுக அரசு விசாரணை செய்ய வேண்டும். நிச்சயமாக அதிமுக அடுத்து ஆட்சி அமைக்கும். அப்போது இந்த கொலைகளையெல்லாம் நாங்கள் தூசிதட்டுவோம்.

சசிகலா குரூப்பில் உள்ளவர்கள் தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள். தற்போது ஆளாளுக்கு ஒரு வேனை எடுத்துக் கொண்டு டூர் போகிறார்கள். இதெல்லாம் வேஸ்ட் ஆப் மணி. வேஸ்ட் ஆப் பியூல். வேஸ்ட் ஆப் எனர்ஜி. இன்றைக்கு டீசல் விற்கிற விலையில் இதெல்லாம் அவர்களுக்குத் தேவையா? இதெல்லாம் வேலைக்கு ஆகப் போவதில்லை. ஒற்றைத் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உறுதியாக உள்ளனர். மேலும் சசிகலா, தினகரன் போன்றோரை அதிமுக ஒரு போதும் ஏற்காது ” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in