ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்கிற ரீதியில் ஜெயலலிதாவின் வாரிசாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு இருக்கும் அவரது அண்ணன் மகன் தீபக் கருத்துக்களை வெளியிட்டிருப்பதற்கு ஜெ வின் இன்னொரு வாரிசான தீபா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து ஆடியோ ஒன்று வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கும் அந்த ஆடியோவில் சசிகலா குடும்பத்தின் மீதான குற்றச்சாட்டு, தீபக்கிற்கு கண்டனம் என பரபரப்பைக் கிளப்பியுள்ளார் தீபா.
அதில், " ஆடம்பர வாழ்க்கையையும், சுகபோக வாழ்க்கையும் அனுபவிக்க வேண்டும் அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக தான் அத்தைகூட இருந்தாங்க. அதோட அரசியல் பவர், அந்த அரசியல் பவரா அபகரிக்கனுங்கிற எண்ணத்தோடவும் அத்தை கூட இருந்தாங்க. ஐந்து ஆண்டு காலத்திற்குப் பிறகு இதெல்லாம் வெளியே வந்திருக்கும் நேரத்தில் கமிஷன்ல அவங்களுக்கு தொடர்பு இருக்குன்னு சொன்ன பிறகு கூட தீபக் அதை மறுத்து பேசியிருக்கிறது அதிர்ச்சியாக உள்ளது. ஆச்சரியமாக இருக்கிறது.
சசிகலாவின் பின்னணியில் அவங்களோட கைப்பிடியில் இருந்து கொண்டுதான் தீபக் இதை பேசுகிறார் என்று நினைக்கிறேன். 67 நாள் நான் கூடவே இருந்தேன் என்று தீபக் சொல்லியிருக்கிறார். அப்படி 67 நாள் கூடவே இருந்து அவர் என்னதான் செய்திருக்கிறார். அப்போது அவர் எந்த தகவலையும் வெளியே சொல்லவில்லை. செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை.
அத்தையின் வாரிசு என்று தீபக் சொல்லியிருக்கிறார் அப்ப நான் யார்? அவருக்கு முன் பிறந்த நானும் தானே வாரிசு. இரண்டு வாரிசுகள் இருக்கும் போது ஒருவரை மட்டும் உள்ளே வைத்துக் கொண்டு இன்னொருவரை வெளியே நிறுத்தி வைத்தது என்ன நியாயம்? சசிகலா நடராஜன் குடும்பத்தினர் எந்த தவறும் தான் செய்யவில்லை, அப்போலோவில் நேர்மையான சிகிச்சை தான் நடைபெற்றது என்று சொன்னால் என்னை வெளியே நிறுத்த வேண்டிய அவசியம் அதில் என்ன வந்தது? இந்தக் கேள்விக்கு அன்று முதல் இன்று வரை உண்மை தெரியாமல் இருக்கிறது.
எந்த விவரமும் தெரியாத, சசிகலா என்ன சொன்னாலும் ஆமாம் சாமி போடுகிற தீபக்கை மட்டும் உள்ளே வைத்துக் கொண்டு, நன்கு விவரம் தெரிந்த, மெடிக்கல் பற்றி நன்கு அறிந்த என்னை வெளியே வைத்துவிட்டு எந்த தகவலையும் சொல்லாமல் மறைத்தது ஏன்?
அத்தையின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்க விடாமல் எனக்குள்ள உரிமையையும் பறித்தது ஏன்? இதன் மூலமாக பெரிய துரோகத்தை அத்தைக்கு சசிகலா செய்திருக்கிறார்.
வாரிசாக தீபக், தீபா என ரெண்டு பேர் இருக்கும்போது தீபக் மட்டும் வேண்டும் தீபா வேண்டாம் என்று அத்தை சொன்னதாக சசிகலா பதிவு செய்து இருக்கிறார். இப்படி யாராவது சொல்வார்களா? ஒரு முதலமைச்சராக இருந்தவர், மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் இப்படி சொல்லி இருப்பாரா என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம்.
அத்தைக்கு என்னை பிடிக்காது அதனால்தான் அனுமதிக்கவில்லை என்று சசிகலா ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார். சரி பிடிக்காது என்றே வைத்துக்கொள்வோம். கிரிட்டிக்கலான நிலையில், வெண்டிலேட்டரில் வைத்திருக்கிற ஒருவரை பார்க்க அனுமதிப்பதில் என்ன சிரமம்? அப்படி இருக்கிற ஒருவர் எப்படி இன்னார்தான் வர வேண்டும், இன்னார் வரக்கூடாது என்று சொல்லி இருக்க முடியும்?
அதிமுக அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ, மற்ற தலைவர்களோ யாருமே அத்தையை சந்திக்க சந்திக்கவில்லை என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். சசிகலா குடும்பத்தினர் கொடுத்த தகவல்களைத்தான் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள், வெளியே சொன்னார்கள். அதனால் தீபக் சொல்லும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள தக்கவையாக இல்லை. அவை சசிகலாவின் செல்வாக்கால் சொல்லப்படுகிறவையாகத்தான் இருக்கிறது.
எங்கள் அப்பா ஜெயக்குமார், அம்மா விஜயலட்சுமி, அத்தை ஜெயலலிதா, அக்கா தீபா ஆகிய தீபக்கின் சொந்த குடும்பமாகிய எங்களுக்கு துரோகம் செய்துவிட்டு, கேடு விளைவித்து விட்டு யாரோ ஒரு சசிகலா சொல்வதைல்லாம் கேட்டுக்கொண்டு நடப்பது சரியல்ல. காலம்தான் இதனை சரி செய்யும்.
அதோடு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் இதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் விதமாக தீபக் பேசுவது சரியில்ல. அது நடக்கக்கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
அத்தையின் மரணத்தில் என்ன விதமான சந்தேகம் இருந்தாலும், அவர் எந்த விதமாக பாதிக்கப்பட்டு மரணம் அடைந்திருந்தாலும், அதில் சூழ்ச்சிகள் இருந்தால் அதை வெட்ட வெளிச்சமாக நாடு தெரிந்து கொள்ள வேண்டும், வாரிசான எனக்கும் அதில் இருக்கும் உண்மை தெரிய வேண்டும்.
இந்த விசாரணையை யார் தடுத்தாலும் தமிழக அரசு இதை கையில் எடுத்துக்கொண்டு நேர்மையான, நாணயமான விசாரணையை நடத்த வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்" என்று ஆடியோவில் பேசியுள்ளார்.