பாஜக தலைவர்களின் அழைப்பின் பேரில் டெல்லிக்கு அதிமுக ஒங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளதாக கூறப்பட்டாலும், தேர்தல் ஆணையத்தில் அவர் முறையிடச் சென்றதாக கூறப்படுவதால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பாஜக கூட்டணியின் வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இவர் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவைச் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்லம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தனித்தனியாக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
இந்த அழைப்பை ஏற்று டெல்லி சென்றுள்ளார். அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி, வழக்கறிஞர் மனோஜ்பாண்டியன், முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சென்றுள்ளனர்.
இப்பயணம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில்,, "குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளரின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது. அதனால் டெல்லி செல்கிறேன்" என்றார். தொடர்ந்து ஒற்றைத் தலைமை குறித்து டெல்லி தலைவர்களுடன் விவாதிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை.
டெல்லி சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து தமிழக அரசியல் சூழல் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழுவில் நடந்தவை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.