அதிமுக அடிமை கட்சியா?: டெல்லியில் செய்தியாளர்களிடம் எகிறிய ஈபிஎஸ்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிஅதிமுக அடிமை கட்சியா?: டெல்லியில் செய்தியாளர்களிடம் எகிறிய ஈபிஎஸ்! எ

எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் சுதந்திரமாக செயல்படுகின்றன. திமுக கூட்டணியைப் போல அடிமைகள் கட்சியாக அதிமுக இல்லை என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழ்நாடு எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக இன்று செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி கூறுகையில்," சம்பிரதாய அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினோம். தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ விவகாரம் குறித்து அதிர்ச்சியடைந்தேன். நிதி அமைச்சர் பேசிய ஆடியோ விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். ஆடியோ விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என்று அமித் ஷாவிடம் வலியுறுத்தியுள்ளோம்" என்றார்.

அதிமுக, பாஜக தலைவர் அண்ணாமலை மோதல் குறித்த கேள்விக்கு, " அதிமுகவுக்கும், அண்ணாமலைக்கும் எந்த தகராறும் இல்லை. அதிமுக-பாஜக இடையே பிரிவினையை உண்டாக்க சிலர் முயற்சிக்கின்றனர். அந்தந்த கட்சிகள் அவரவர்களின் கொள்கையின் அடிப்படையில் செயல்படும். எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் சுதந்திரமாக செயல்படுகின்றன. திமுக கூட்டணியைப் போல அடிமை கட்சி அதிமுக இல்லை. நாங்கள் ஒற்றுமையாக செயல்பட்டு எங்கள் கூட்டணியை வெற்றிபெறச்செய்வோம்" என்றார் எடப்பாடி பழனிசாமி.

மேலும் அவர் கூறுகையில், “துரோகம் செய்தவர்களுக்கு அதிமுகவில் இடம் இல்லை. துரோகம் செய்தவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் வந்தால் கட்சியில் சேர்ப்போம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளை கைதுசெய்தது அதிமுக அரசு. கோடநாடு வழக்கில் கைதானவர்களுக்கு திமுகவைச் சேர்ந்தவர்கள் ஜாமீன் எடுத்துக்கொடுத்தனர்.

அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எங்களுக்குச் சாதகமாக முழுமையாக தீர்ப்பு வழங்கிவிட்டது. நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கிவிட்டது. அதிமுக எங்கள் பக்கம் தான் உள்ளது. அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடைபெறவில்லை. டெண்டர் முறைகேடு நடைபெற்றதாக சிஏஜி அறிக்கை கூறவில்லை. கடந்த அதிமுக ஆட்சி 4 ஆண்டுகள் சிறப்பாக நடைபெற்றதாக, செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூறுகின்றனர். ஆனால், திமுகவின் இந்த ஆட்சி எப்போது போகும் என மக்கள் கேட்கின்றனர். மேலும், திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார். அது எல்லோருக்கும் தெரியும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in