நீங்கள் என்ன பிரதமர் வேட்பாளரா?... பிரதமர் மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுலுக்கு ஸ்மிருதி இரானி கேள்வி!

ஸ்மிருதி இரானி ராகுல் காந்தி
ஸ்மிருதி இரானி ராகுல் காந்தி

காங்கிரஸின் கோட்டையான அமேதி தொகுதியில் போட்டியிட தைரியம் இல்லாதவர். பிரதமர் மோடியை விவாதத்துக்கு அழைக்கலாமா என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தலின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பொது தளத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றும், இதில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் பங்கேற்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர், அஜித் பி.ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் ஆகியோர் கடந்த சில நாள்களுக்கு முன் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த அழைப்பை ஏற்று தேர்தல் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் என ராகுல் காந்தி தற்போது தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடியும் இந்த விவாதத்தில் பங்கேற்க வேண்டுமென ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி - ராகுல் காந்தி
பிரதமர் மோடி - ராகுல் காந்தி

பிரதமர் மோடியை விவாதத்திற்கு அழைத்த ராகுல் காந்தியின் சவாலுக்கு பதிலளித்த அமேதி தொகுதியின் பாஜக வேட்பாளரான மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, " தங்கள் கோட்டை என்று அழைக்கப்படும் அமேதியில் ஒரு சாதாரண பாஜக ஊழியரை எதிர்த்துப் போட்டியிட தைரியம் இல்லாதவர், இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும்.பிரதமர் மோடியுடன் சமமாக அமர்ந்து விவாதம் செய்ய விரும்பும் இவர் யார்?. அவர் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

உ.பியின் அமேதி மக்களவைத் தொகுதி காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியாக உள்ளது. 2004 முதல் அத்தொகுதியில் வெற்றிபெற்று வந்த ராகுல் காந்தி, 2019 இல் ஸ்மிருந்தி இரானியிடம் தோல்வியடைந்தார். அவர் இந்தமுறை கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டதுடன், சோனியா காந்தியின் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் இருந்தும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in