அட்சயப்பாத்திரம் திட்டத்தில் முறைகேடா?- ஆளுநரிடம் விளக்கம் கேட்கும் நிதியமைச்சர்!

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்அட்சயப் பாத்திரம் திட்டத்தில் முறைகேடா? ஆளுநரிடம் விளக்கம் கேட்கும் நிதியமைச்சர்!

ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சிஏஜி விதிமுறைகளை மீறிக் கையாளப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஆளுநர் உரிய விளக்கம் அளிக்க வேண்டுமெனத் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘’2018 - 19-ம் ஆண்டில் ஆளுநர் மாளிகைக்கு வழங்கப்பட்ட 50 லட்சத்திலிருந்து 5 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நிதி ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்தோம்.

5 கோடியில் 4 கோடியை அட்சயப்பாத்திரம் திட்டத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு கோடி ரூபாய் கண்ணுக்குத் தெரியாத கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆளுநர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வகையில் அந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கணக்கைப் பார்த்தால் அச்சம் வருகிறது. சிஏஜி விதிகளை மீறி நடந்துள்ளது.

இந்த மாதிரி திட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமானது. 5 கோடியை மறைமுகமாக எடுத்துச்செல்வது நல்ல திட்டமே இல்லை. இது தொடர்பாக ஆளுநர் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த மாதிரியான திட்டங்களில் மாற்றம் கொண்டு வருவதே சரி. அரசு கஜானாவிலிருந்து நேரடியாகச் செலவு செய்ய வேண்டும்’’ என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறுக்கீட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ், ‘’ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்டதைக் கொச்சைப்படுத்துகிறீர்களா?. நீங்க சொன்னா சரி. நாங்கள் சொன்னா தப்பா?’’ எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய சபாநாயகர், ‘’இந்த விவகாரம் தொடர்பான ஆதாரத்திற்கு நிதியமைச்சர் பொறுப்பெடுத்துக் கொள்கிறார்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in