கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த அரசு அனுமதி குறித்த கேள்விக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை புறநகர் மருத்துவமனையில் உள்ள கிணற்றில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதால் அதை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து செய்தி வெளியானது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் தற்போது கிணற்றைச் சுத்தம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டது.
இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் செந்தில்குமார், மருத்துவர் கல்வி இயக்குனர் நாராயண பாபு ஆகியோர் சைதாப்பேட்டை மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் பின் அவர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், " மருத்துவமனை வளாகத்தில் உள்ள கிணற்றில் காலாவதியான மருந்துவக்கழிவுகள் கொட்டப்படுள்ளதாக செய்திகள் வெளியானது. காலாவதியான மருந்துகள் அல்லது பேப்பர்கள் அகற்றப்பட வேண்டும். கிணற்றில் கொட்டுவது தவறு. மேலும் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு மருந்தாளுநர்களிடம் கேட்டபோது அவர்கள் காலாவதியான மருந்து தங்களிடம் இல்லை" என்று தெரிவித்துள்ளனர்.
"எனவே, இதுகுறித்த செய்தியின் உண்மைத்தன்மையை அறிய இணை இயக்குனர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி உண்மையிலேயே காலாவதியான மருந்து கொட்டப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், " தமிழ்நாடு முழுவதும் ஒரு சில இடங்களில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதால் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது, மருத்துவக்கழிவுகளை அகற்றும் முறைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் மருத்துவக்கழிவுகள் அகற்றப்படுவதை முறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தொற்று ஏற்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்துவது தான் தீர்வு. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைத் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இப்போது எழவில்லை" என்றார்.
கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த அரசு அனுமதி வழங்குமா என்று கேள்விக்கு, "பொது நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு தடை எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே, அரசு அறிவித்துள்ளது போல் கட்டாய முகக்கவசம், சமுக இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இக்கூட்டத்தை நடத்த வேண்டும்" என பதிலளித்தார்.