இளையராஜாவை அவமானப்படுத்துவதா?- தமிழக கட்சிகள் மீது பாயும் ஜே.பி.நட்டா

இளையராஜாவை அவமானப்படுத்துவதா?- தமிழக கட்சிகள் மீது பாயும் ஜே.பி.நட்டா

"இசையின் மேஸ்ட்ரோவான இளையராஜாவை அவமானப்படுத்துவதா?" என தமிழக அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.

இசைஞானி இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தக் கருத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக, அதிமுகவை தவிர்த்து இளையராஜாவை அனைவரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், இளையராஜாவுக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டதற்காக இளையராஜாவை தமிழகத்தில் ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் வசைபாடுகின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய இசை மேதைகளில் இளையராஜாவும் ஒருவர்.

ஆளுங்கட்சியின் விருப்பத்திற்கு முரணான கருத்தை தெரிவித்ததற்காக இளையராஜாவை அவமதிப்பது சரிதானா? இன்றைய இளைஞர்கள் வாய்ப்புகள், வளர்ச்சியை விரும்புகிறார்கள். தடைக்கற்களையும் பிரிவினையையும் அல்ல. தங்களுக்கு மட்டுமே சாதகமாக பேச வேண்டும், செயல்பட வேண்டும் என நினைப்பது எவ்வாறு ஜனநாயகமாகும்?. மாற்று கருத்துகளை கொண்டிருப்பதால் மட்டுமே ஒருவரை அவமதிப்பது எந்தவிதத்தில் சரி?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in