
நுரையீரல் தொற்று மற்றும் இதய செயலிழப்பிலிருந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீண்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு லேசான கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலும் அவருக்கு மூச்சுத்திணறல் இருந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டதால் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். கொரோனாவில் இருந்து அவர் மீண்டு விட்டதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
கடந்த 26-ம் தேதி அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நுரையீரலில் தொற்று ஏற்பட்டு இதய செயலிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் மீண்டும் மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உடல்நிலை சீராக உள்ளது. இதயம் செயலிழப்பு மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைந்து வருகிறார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.