உலக பட்டினி குறியீட்டில் இலங்கையைவிட மோசமான நிலையில் இந்தியா: ராமதாஸ் வேதனை

உலக பட்டினி குறியீட்டில் இலங்கையைவிட மோசமான நிலையில் இந்தியா: ராமதாஸ் வேதனை

"உலக பட்டினி குறியீட்டில் ஏழை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், சூடான் ஆகியவற்றை விட இந்தியா பின்தங்கியிருப்பது கவலையளிக்கிறது" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "2022-ம் ஆண்டுக்கான உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலகின் ஐந்தாவது பொருளாதார வல்லரசாக உயர்ந்துள்ள இந்தியா, ஏழை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், சூடான் ஆகியவற்றை விட பின்தங்கியிருப்பது கவலையளிக்கிறது. 2000-வது ஆண்டில் இந்த பட்டியல் வெளியிடத் தொடங்கியது முதல் இப்போது வரையிலான 23 ஆண்டுகளில் 2020-ம் ஆண்டை தவிர மற்ற 22 ஆண்டுகளில் இந்தியா 100-வது இடத்திற்கு கீழ் தான் உள்ளது. இந்த சிக்கலைத் தீர்க்க இந்தியா முயலவில்லை என்பதையே இது காட்டுகிறது.

உலக பசி குறியீடு என்பது பசி, பட்டினியை விட நுண்ணூட்டச் சத்து குறைபாடு, குழந்தைகளின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற வளர்ச்சி இல்லாமை, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆகியவற்றைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. அதனால் இந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். நுண்ணூட்டச் சத்துக்குறைவு, வளர்ச்சி இல்லாமை ஆகியவற்றுக்கு வறுமை தான் முக்கியக் காரணம். இவை தவிர மற்ற காரணங்கள் என்னென்ன? என்பதைக் கண்டறிந்து அவற்றை சரி செய்வதற்கான கொள்கைகளை வகுத்து மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in