
இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உறவு பாதிப்பால் கனடா அரசுக்கு சுமார் 727 மில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் வசித்து வந்த கேடிஎஃப் எனும் காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிலையில், இந்த கொலைகளுக்கு பின்னணியில் இந்திய ஏஜென்ட்டுகளின் பங்கு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது. இதனை இந்தியா மறுத்தது.
ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் மோதல் போக்கு ஏற்பட்டதையடுத்து, இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் கனடா தூதரக உயர் அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற்றியது.
அதேபோல், கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியது.
இவ்வாறாக ஹர்தீப் சிங் நிஜ்ஜார் விவகாரத்தால் இந்தியா - கனடா இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா - கனடா இடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த மோதல் போக்கால் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு உயர் படிப்புக்காக செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தபட்சம் 5 சதவீதமாவது குறையும் என்று இமேஜ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கனடாவின் பொருளாதாரத்தில் ஏற்பட போகும் பாதிப்பு சுமார் 700 மில்லியன் டாலர் (சுமார் ரூபாய் 5 ஆயிரத்து 821 கோடி) அளவுக்கு இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் மதிப்பிட்டுள்ளனர். அதாவது, கனடாவுக்கு மேல் படிப்பு செல்லும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான். அதாவது ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் மாணவர்கள் கனடாவுக்கு கல்விக்காக செல்கின்றனர்.
ஆனால், தற்போது இந்தியா - கனடா இடையேயான மோதல் போக்கு காரணமாக கனடா செல்வது எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்ற அச்சம் இந்திய மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் காரணமாக கனடா செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.
கனடாவில் படிப்புக்காக செல்லும் ஒவ்வொரு இந்திய மாணவரும் சராசரியாக 16 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (ரூ.13 லட்சம்) மொத்தமாக செலவு செய்வார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. லேப்டாப் வாங்குவது, வீட்டு வாடகை, பேங்க் செக்யூரிட்டி தொகை மற்றும் விமானக் கட்டணம் உள்ளிட்டவையும் இதில் அடங்கும். இரண்டு ஆண்டுகள் படிப்புக்காக ஒரு மாணவர் செலவிடும் மொத்த செலவு அமெரிக்க டாலர் மதிப்பில் 53 ஆயிரத்தை எட்டும் (ரூபாய் மதிப்பில் 44 லட்சம்).
கனடா பொருளாதாரத்தில் ஒரு இந்திய மாணவரின் பங்களிப்பு என்பது இரண்டு ஆண்டுகளுக்கு 69 ஆயிரம் டாலராக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே, ஜனவரி மாத பேட்ஜில் இந்திய மாணவர்கள் கனடா செல்வது 5 சதவீதம் குறைந்தால் கூட கனடா பொருளாதாரத்தில் 230 மில்லியன் டாலர் (ரூ 19.1 பில்லியன்) இழப்பு ஏற்படக்கூடும்.
மே மற்றும் செப்டம்பர் மாத பேட்ஜ் மாணவர்களின் எண்ணிக்கை இதேபோல குறைந்தால் கனடாவுக்கு மேலும் இழப்பு ஏற்படும். அது மட்டுமின்றி கனடாவில் உள்ள நிறுவனங்களில் இந்திய மாணவர்கள் பணியாற்றுவதால் அங்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால் அந்த நாட்டுக்கு ஒட்டு மொத்தமாக 727 மில்லியன் டாலர்கள் ( இந்திய மதிப்பில் ரூபாய் 6,045 கோடி) அளவுக்கு இழப்பை ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!
கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!
பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!
அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!