நியாய விலைக் கடைகளுக்கு பாமாயில், பருப்பு உள்ளிட்டவற்றை சப்ளை செய்யும் நிறுவனங்களுக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அரசின் பொது விநியோகத் திட்டத்திற்காக சில குறிப்பிட்ட நிறுவனங்கள் பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்து வருகின்றன.
பொது விநியோகத்திட்டத்திற்கு பாமாயில் மற்றும் பருப்புகளை சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு சொந்தமான தமிழகத்தில் உள்ள 40 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ரேஷன் கடைகளுக்கு அதிக அளவு உணவுப் பொருட்களை சப்ளை செய்து வரும் சென்னை மண்ணடி பகுதியில் உள்ள அருணாச்சலம் இம்பேக்ஸ் அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது. அதுபோல், பாமாயில், பருப்பு உள்ளிட்டவற்றை சப்ளை செய்யும் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி குரூப் ஆஃப் கம்பெனிஸ் மற்றும் இன்டெர் கிரேடட் சர்வீஸ் குரூப் ஆகிய நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.