தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு எப்படி உள்ளது?: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு பேட்டி

முதல்வர் வருகை குறித்து ஆய்வு செய்த அமைச்சர்கள்
முதல்வர் வருகை குறித்து ஆய்வு செய்த அமைச்சர்கள்

தமிழ்நாட்டில் கரோனாவின் பாதிப்பு கடந்த சில நாட்களாகவே ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை குறித்து ஆய்வு செய்வதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திருச்சி இன்று வந்திருந்தார். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "2021 ஆக.5-ம் தேதி மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் முதல் நபருக்கு மருத்துவ பெட்டகம் வழங்கி அத்திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 

தற்போது அத்திட்டத்தில்  ஒரு கோடியாவது நபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் சன்னாசிப்பட்டியை சேர்ந்த அந்த நபருக்கு டிச.29-ம் தேதி திருச்சி வரும் முதல்வர்  தனது கையால் மருத்துவப் பெட்டகத்தை வழங்குகிறார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கரோனா தாக்கம் ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. கடந்த ஏழு, எட்டு மாதங்களாக உயிரிழப்புகளும் இல்லாத நிலைதான் உள்ளது.  அதற்கு காரணம், தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றியதுதான். 

தமிழ்நாட்டில் முதல் தவணைத் தடுப்பூசியை 96 சதவீதம் பேரும், 2வது தவணை தடுப்பூசியை 92 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர். அதனால் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.

கரோனா மரபணு சோதனை மேற்கொள்ள மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதற்கான பிரத்யேக ஆய்வகம்  சென்னையில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தொடர்ந்து கரோனா மரபணு மாற்றத்தை கண்காணித்து வருகிறோம். கரோனா குறித்தும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

சீர்காழியைச் சேர்ந்த 13 வயது மாணவி தோல் அழுகல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.அது குறித்து முதல்வருக்கு அவர் கோரிக்கை வைத்த வீடியோ வைரலானது. அது எங்கள் கவனத்திற்கு வந்த பின்பு மாணவியை, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வாதநோய் பிரிவில் அனுமதித்துள்ளோம். அங்கு அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை நானே நேரில் சென்று சந்தித்து நலம் விசாரிக்க உள்ளேன். மாணவிக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும்.

பொதுமக்களின் அத்தியாவசிய பிரச்சனைகள் பத்திரிக்கை, ஊடகங்கள், சமூக வலைதளங்களில்  இதுபோன்று கோரிக்கைகளாக வரும் பட்சத்தில் அவை முதல்வரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2019-ல் எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையில்தான் தற்போதும் உள்ளது. விரைவாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட வேண்டும்.

கோவையில் ஒரு எய்ம்ஸ் வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். 2024 தேர்தலை மையப்படுத்தி மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்ட முயற்சித்தாலும், தேர்தலுக்காக செய்தாலும் அதை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in