ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு: சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்.
சென்னை உயர் நீதிமன்றம்.ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு: சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 45 மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று விசாரித்தனர்.

ஆர்எஸ்எஸ் தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஏற்கெனவே அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மாற்றியமைத்து, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த உத்தரவிட்டது தவறு என்பதால், இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான் என வாதிடப்பட்டது.

ஒருபுறம் அமைதிப் பூங்கா எனக் கூறிவிட்டு, இன்னொருபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என அனுமதி மறுப்பதாகவும், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ். தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறை தரப்பில், சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து,  அணிவகுப்பு நடத்தப்பட மாட்டாது என ஆர்எஸ்எஸ் அறிவித்த நிலையில், இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவிக்கப்பட்டது.

சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கவே அரசு முயற்சித்ததாகவும், உளவுத்துறை அறிக்கை அடிப்படையில் காவல் துறையினர் செயல்பட்டதாகவும் அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அணிவகுப்புக்கு அனுமதி கோரி முறையாக விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள், தனிப்பட்ட முறையில் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிப்பார்கள் என்றும் காவல்துறை தரப்பில்  தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர்.

மேலும், கருத்துரிமை, பேச்சுரிமையைத் தடுக்காத வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும் என தமிழக அரசிற்கு அறிவுறுத்திய நீதிபதிகள், கடுமையான ஒழுங்குடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிகளை நடத்த அனுமதிக்க காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும்  அணிவகுப்புக்கு அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும், அந்த  விண்ணப்பங்களை சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று காவல் துறைக்கும் நீதிபதிகள்  உத்தரவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in