அரசுத்துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால், சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று சிக்கிம் அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாநிலம் சிக்கிமாகும். இதன் காரணமாக குறைந்துவரும் பிறப்பு விகிதத்தை உயர்த்தும் வகையில், குழந்தைகள் பெற்றுக் கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, அரசுத் துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வும், மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் இரண்டு ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்று சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமங் அறிவித்துள்ளார்.
முன்னதாக, மற்ற மாநில அரசுகள் அறிவிக்கும் முன்பே, குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறையும், தந்தைக்கு 30 நாட்கள் விடுமுறையும் சிக்கிம் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.