`தேர்தல் வைத்தால் நான்தான் அதிமுக தலைவராக வருவேன்'- உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் அதிரடி வாதம்

`தேர்தல் வைத்தால் நான்தான் அதிமுக தலைவராக வருவேன்'- உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் அதிரடி வாதம்

"இன்று தேர்தல் நடைபெறுகிறது என்றாலும் கூட நான் (ஓபிஎஸ்) தான் வெற்றி பெற்று அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக வருவேன்" என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று 3-வது நாளாக நடைபெற்றது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் வாதிடுகையில், "எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு தனிப்பட்ட முறையில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு அதிகாரம் இல்லை. வழக்கமான பொதுக்குழு கூட்டங்களுக்கும், சிறப்பு பொதுக்குழு கூட்டங்களுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது. இவை அதிமுகவின் கட்சி விதிமுறைகளிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் எவ்வாறு அறிவிக்கப்பட வேண்டும் என கட்சி விதிகளில் கூறப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாக தெரிவிக்கப்பட வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பில் இருந்த பல முக்கியமான அம்சங்களை உயர்நீதிமன்ற அமர்வு கணக்கில் கொள்ளாமலேயே விட்டுவிட்டனர். திமுகவிலிருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் மூலமாக வெளியேற்றப்பட்டதால்தான் அதிமுக என்ற தனிக்கட்சியை எம்ஜிஆர் ஆரம்பித்தார். அந்த பொதுக்குழு கூட்டம் அவருக்கு கசப்பான அனுபவமாகவே இருந்தது. எனவேதான் எம்.ஜி.ஆர், எப்போதும் கட்சி முடிவுகளை அடிப்படைத் தொண்டர்கள் மூலமாகவே எடுக்க வேண்டும் என்பதை விரும்பினார். அதன் அடிப்படையிலேயே கட்சி விதிகளையும் அவர் அமைத்தார். சில முக்கிய விதிமுறைகள் எப்பொழுதும் மாற்றி அமைக்கக்கூடாது என எம்ஜிஆர் விரும்பினார். ஆனால் அத்தகைய விதிமுறைகளை எல்லாம் அவசரகதியில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மாற்றியுள்ளனர். ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில், திடீரென ஒருவர் மைக்கின் முன்பாக வந்து, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுகிறது என சொல்லிவிட்டு அதனை பொதுக்குழு ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்கள். இவை அனைத்தும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரலை செய்யப்பட்டுள்ளது. இது அதிகார துஷ்பிரயோகம். இன்று தேர்தல் நடைபெறுகிறது என்றாலும் கூட நான் (ஓபிஎஸ்) தான் வெற்றி பெற்று அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக வருவேன்.

அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது. ஒரு தனி மனிதனின் சுயநலத்திற்காகவும் பதவி வெறிக்காகவும் கட்சி பலியாக பார்க்கிறது. அதிமுகவின் பொருளாளராக இருக்கும் ஓபிஎஸ் கட்சியின் மிக மூத்த தலைவர். கட்சிக்கு பலமுறை நெருக்கடி ஏற்பட்டபோது முன்னின்று அதனை சமாளித்தவர். கட்சியின் தலைமை இவருக்கு மூன்று முறை முதலமைச்சர் பதவியை கொடுத்த போதும் விசுவாசத்துடன் நடந்து கொண்டு தலைமையின் நன்மதிப்பை பெற்றவர். ஆனால் அத்தகைய ஒருவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து கூட நீக்கி இருக்கிறார்கள்" என்று வாதிட்டார். ஓபிஎஸ் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் வழக்கை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in