ஈபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட் : அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

ஈபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட் : அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு என அவதூறு பரப்புவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-21-ம் ஆண்டுகளில் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அப்போது 2019 முதல் 2021-ம் ஆண்டுகள் வரை தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, தலைமைச் செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22-ம் தேதி புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

நல்ல நிலையில் உள்ள சாலைகளை மீண்டும் போடுவதற்கு இந்த டெண்டர்களில் சேர்த்தததன் மூலமும், திட்டமதிப்பு அதிகப்படுத்தப்பட்டு இருந்ததாலும், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகாரில் குறிப்பிட்டிருந்தது. இதுதொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தது.

இதனால் தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாள ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைபாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.
அதில், மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடவும், தனக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான கருத்துகளை வெளியிடவும் அறப்போர் இயக்கத்திகும், அதன் நிர்வாகிகளுக்கும் தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து அறப்போர் இயக்கம் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

அப்போது இடைக்கால தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அறப்போர் இயக்கத்தின் தகவல்கள் அனைத்தும் வெளியாகி விட்டதால், தடை விதிக்க அவசியமில்லை என கூறிய நீதிபதி, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பிறகும் தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டால் அதை நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரும்படி, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அறிவுறித்தி உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in