
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவை காவல் துறையினர் திடீரென கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் பழனி இடும்பன் கோயில் குளக்கரையில் மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா கலந்து கொள்ள இருந்தார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறவில்லை என்றும் பக்தர்கள் எத்தனை வாகனங்களில் வருகை தருவார்கள் என்ற விவரம் அளிக்கவில்லை என காரணம் கூறியும் அனுமதி மறுத்தது காவல் துறை. இதனிடையே, நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நடத்த வந்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவை சத்திரப்பட்டியில் வைத்து திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது, காவல் துறையினருடன் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.