கடந்த 36 மணி நேரத்தில் சுமார் 15 படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக டிஜிபி பதில் அளித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் குற்றங்களைத் தடுப்பதில் நிர்வாகத் திறமையற்ற இந்த விடியா அரசின் முதல்வர், விளம்பர மோகத்தில் திளைத்துள்ளதால், இன்று தமிழகம் கொலைக் களமாக மாறி வருகிறது. முதல்வரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் காவல்துறை செயலிழந்து கிடப்பது வெட்கக்கேடானது. கடந்த 36 மணி நேரத்தில் சுமார் 15 படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. சட்டம்-ஒழுங்கை நானே நேரடியாக கவனித்து வருகிறேன் என்று முதல்வர் சில தினங்களுக்கு முன்பு கூறினார். இதுதான் அவர் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா?. விடியா திமுக அரசு இனியாவது விழித்துக்கொண்டு கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் பலாத்காரம், போதைப் பொருள் விற்பனை போன்ற சமுதாய சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்தி, தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்" என்று காட்டமாக கூறியிருந்தார்.
இதனிடையே, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், `கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில ஊடகச் செய்திகளில் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 22.8.2022 அன்று 7 கொலைகளும், 23.8.2022 அன்று 5 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளது. சில ஊடகங்களில் பட்டியலிடப்பட்ட பல்வேறு கொலை வழக்குகள் ஆகஸ்ட் மாதத்தில் முந்திய நாட்களில் நடைபெற்றவை.
மேலும் பெரும்பாலான கொலை சம்பவங்கள் குடும்ப உறுப்பினர்கள், தனி நபர்களிடையே உள்ள முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது. 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 940 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 2021-ல் அதே காலகட்டத்தில் 925 கொலைகளும், 2019-ம் ஆண்டு 1041 கொலைகளும் நிகழ்ந்துள்ளது. ஆகவே முந்தைய 2019-ம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு 101 கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன' என்று தெரிவித்துள்ளார்.